காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த புலம்பெயர் தொழிலாளர்களுடன் கலந்துரையாடினார்.
இந்தியா முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் இந்தியப் பொருளாதாரம் கடுமையாகச் சரிவடைந்துள்ளது. இதனை மீட்டெடுக்கும் வகையில் பிரதமர் மோடி 20 லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக அண்மையில் அறிவித்தார். அதன்படி ஒவ்வொரு நாள் மாலையும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திட்டங்களை அறிவித்து வருகிறார்.
இந்நிலையில் இன்று காலை அரசின் திட்டங்கள் குறித்த தனது மாற்றுக்கருத்தைப் பதிவிட்ட ராகுல் காந்தி மாலையில் நெடுஞ்சாலைகளில் சொந்த ஊர் நோக்கிச் சென்று கொண்டிருந்த புலம்பெயர் தொழிலாளர்களை நேரில் சென்று உரையாடினார். டெல்லியில் உள்ள சுக்தேவ் விஹார் ஃப்ளை ஓவரில் உத்தரப் பிரதேசம் மற்றும் மத்தியப்பிரதேச மாநிலம் நோக்கிச் சென்று கொண்டிருந்த இரண்டு மாநிலக் குழுவினர்களிடம் சென்றார். சாலையில் அமர்ந்த அவர், மகேஷ் குமார் என்ற வெளிமாநில தொழிலாளியுடன் உரையாடினார்.
இது குறித்து மகேஷ் குமார்,“ ராகுல் காந்தி நாங்கள் படும் கஷ்டங்களைத் தெரிந்து கொள்ள விரும்பினார். பட்டினியால் நாங்கள் படும் வேதனையை அவரிடம் தெரிவித்தோம். மேலும் எங்களுக்கு வேலை இல்லாததால் கடந்த 50 நாட்களையும் இப்படிதான் கழிக்கிறோம் என்பதையும் கூறினோம்.
கடந்த நான்கு நாட்களாக 12 இளைஞர்கள் மற்றும் குழந்தையுடன் பயணிக்கிறேன் என்று நான் கூறிய போது, அவர் உணவுக்கு என்ன செய்கிறீர்கள் எனக் கேட்டார். அப்போது நான் வழியில் கிடைக்கும் பணத்தை வைத்து உணவு உண்கிறோம் எனக் கூறிய போது அவரால் தொடர்ந்து நாங்கள் பேசுவதைக் கேட்க முடியவில்லை. அதனால் நாங்கள் பேசுவதை நிறுத்தச் சொன்னார். இறுதியில் அவராலான உதவிகளை எங்களுக்குச் செய்வதாக உறுதியளித்தார்” என்று கூறியுள்ளார்.