திருப்பதி கோயில் 40 நாட்களுக்கு மேலாக மூடப்பட்டுள்ளதால் உண்டியல் வருவாய் இல்லாமல் 400 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக திருப்பதி திருமலை தேவஸ்தானம் தெரிவித்துள்ளது
அதிக அளவிலான பக்தர்கள் கூடும் வழிபாட்டுத்தலங்களில் ஒன்று திருப்பதி. 24 மணி நேரமும் பரபரப்பாக இயங்கும் திருப்பதி பகுதி தற்போது வெறிச்சோடி காணப்படுகிறது. நாள் ஒன்றுக்கு 80 ஆயிரத்திலிருந்து ஒரு லட்சம் பேர் வரை திருப்பதிக்கு வந்து போவார்கள். தேவஸ்தானத்தின் ஆண்டு மொத்த செலவு 2500 கோடி ரூபாய். ஆண்டுக்கு பணியாளர்களுக்கு மட்டுமே 1300 கோடி ரூபாய் சம்பளமாக கொடுக்கப்படும். தற்போது 8 டன் தங்கம் வங்கிகளில் நிரந்தர டெபாசிட் செய்யப்பட்டு இருக்கிறது.
இப்படி பல கோடி வருவாய் மூலம் இயங்கும் திருப்பதிக்கு ஊரடங்கு காரணமாக வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 40 நாட்களுக்கும் மேலாக கோயிலில் உண்டியல் வருவாயும் இல்லை என திருப்பதி திருமலை தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக 400 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனால் அங்கு பணிபுரியும் பணியாளர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாத ஒரு சூழல் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
மேலும், நிதி சுமையை சமாளிக்க பல்வேறு காப்பீட்டு நிறுவனங்களிடமும், தேவஸ்தான தொடர்புடைய கல்வி நிறுவனங்களிடம் இருந்தும் நிதியை பெற தேவஸ்தானம் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
சென்னை மக்கள் தங்கள் உடல்நிலை குறித்துத் தெரிவிக்க புதிய இணையதளம்