சென்னைக்கு ரயில் சேவை உடனடியாக வேண்டாம்!
பிரதமர் மோடி இன்று மாநில முதல்வர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார், இந்த வார இறுதியில் மூன்றாம் கட்ட ஊரடங்கும் முடிவுக்கும் வரவுள்ள நிலையில் இந்த கூட்டம் இன்று மதியம் 3 மணி தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழக முதல்வர் பழனிசாமி இதில் கலந்து கொண்டு தமிழகத்துக்கான கோரிக்கைகளை முன்வைத்தார். தமிழகத்தில் மருத்துவ உபகரணங்களுக்காக சிறப்பு நிதியாக ரூ. 2,000 கோடியை உடனடியாக வழஙக வேண்டும் என கோரிக்கை விடுத்தார். மேலும் சென்னையில் தொடர்ந்து கொரோனா தொற்று அதிகரிப்பதால் வரும் மே 31 -ம் தேதி வரையில் சென்னைக்கு ரயில் சேவையை தொடங்க வேண்டாம் எனவும் கோரிக்கை விடுத்தார்.
சிறுமியின் குடும்பத்தினருக்கு எனது ஆறுதல்கள்!
தி.மு.க தலைவர் ஸ்டாலின்,“சிறுமி ஜெயஸ்ரீ மீது பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற அ.தி.மு.கவினர் கலியபெருமாள்- முருகனுக்கு உச்சபட்ச தண்டனை பெற்றுத் தர காவல்துறையினர் நடுநிலையோடு செயல்பட வேண்டும். சிறுமியின் குடும்பத்தினருக்கு எனது ஆறுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். உரிய நீதி கிடைக்க தி.மு.க துணை நிற்கும்” எனதெரிவித்துள்ளார்.
தமிழக அரசின் மேல்முறையீடு மனுவில் பிழை!
தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. ஆரஞ்ச், பச்சை மண்டங்களில் சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து சென்னை நீங்கலாக தமிழகத்தில் மதுபானக் கடைகள் திறக்கப்பட்டன. எனினும் சமூக இடைவெளி முறையாகப் பின்பற்றப்படவில்லை எனக் காரணம் சொல்லி பல பொதுநல வழக்குகள் பதியப்பட்டன. இதை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், மே 17-ம் தேதி வரை கடைகளைத் திறக்க தடை விதித்தது.
இதைத்தொடர்ந்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இன்று அந்த வழக்கு விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தமிழக அரசின் மனுவில் பிழை உள்ளதால் உச்சநீதிமன்றம் பிழையை சரி செய்து மீண்டும் மனுத்தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது. மீண்டும் மனு தாக்கல் செய்யப்பட்டால் நாளையே விசாரணைக்கு வர வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பணிக்கு திரும்பும் மக்கள்!
சென்னை தாம்பரம் பகுதியில் அனுமதி வழங்கப்பட்ட மக்கள் தங்களின் அன்றாட பணிகளுக்காக பயணம் மேற்கொண்டனர். வீடியோ: தே. அசோக்குமார்
மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை!
ஊரடங்கை முடிவுக்குக்கொண்டுவருவது மற்றும் மே 17-ம் தேதிக்குப் பிறகு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்து பிரதமர் மோடி, மாநில முதல்வர்களுடன் இன்று வீடியோ கான்ஃப்ரன்ஸில் ஆலோசனை நடத்தவுள்ளார்.
முந்தைய 4 ஆலோசனைக்கூட்டங்களைப் போலல்லாமல் இந்தக் கூட்டத்தில் அனைத்து மாநில முதல்வர்களுக்கும் பேச வாய்ப்பளிக்கப்படும் என்று தெரிகிறது. இதனால், இந்தக் கூட்டம் பல மணிநேரம் நீடிக்கலாம் என்று தெரிகிறது. கூட்டத்தில், மகாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்புகள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட உள்ளது.
Also Read: ஊரடங்கு இருக்கு… ஆனா இல்ல… மூன்றாம் கட்ட ஊரடங்கு…. #LockDown #Version3.0