33% ஊழியர்களை மட்டும் வைத்துக் கொண்டு தனியார் நிறுவனங்கள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக என்று டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கூறியுள்ளார்.
கொரோனா பரவலை தடுக்கும் விதமாக மே 17 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் நாடு முழுவதும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்தபடியே உள்ளது. நாட்டில் மொத்தம் 46,711 பாதிக்கப்பட்டுள்ளனர். தலைநகர் டெல்லியில் 4,898 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 64 இறந்துள்ளனர்.
இந்நிலையில், 33% ஊழியர்களை மட்டும் வைத்துக் கொண்டு தனியார் அலுவலகங்கள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கூறியுள்ளார்.
மேலும் நேரு பிளேஸில் உள்ள சில தனியார் நிறுவனங்களின் அலுவலகங்களைத் திறக்க அனுமதிக்கப்படவில்லை என்ற புகார் குறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். அவரது பதிவில், “நேரு பிளேஸிலிருந்து தனியார் நிறுவனங்களின் அலுவலகங்களைத் திறக்க அனுமதிக்காததாகப் புகார் கிடைத்துள்ளது. எந்தவொரு தனியார் அலுவலகமும் திறக்கப்படுவதை நிறுத்த வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகத்துக்கும் போலீசாருக்கும் தெளிவுபடுத்தியுள்ளோம். ஆனால் அலுவலகத்தில் 33 சதவீத ஊழியர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் ”என்று கூறியுள்ளார்.
மே 4 முதல், தனியார் அலுவலகங்கள் தேவைக்கேற்ப 33 சதவீத ஆட்களுடன் செயல்படலாம். மீதமுள்ள நபர்கள் வீட்டிலிருந்து வேலை செய்கிறார்கள். உள்துறை அமைச்சகத்தின் (எம்.எச்.ஏ) புதிய வழிகாட்டுதல்களின்படி, அவை நீட்டிக்கப்பட்டுள்ள ஊரடங்கு காலம் வரை பொருந்தும்” என்று அவர் கூறியுள்ளார்.