கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் மாநிலம் முழுவதும் மகளிர் அணியைக் களத்தில் இறக்கியுள்ளார் தி.மு.க-வின் மாநில மகளிர் அணிச் செயலாளரும் தூத்துக்குடி தொகுதி எம்.பி-யுமான கனிமொழி. தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள ஏழை, எளிய மக்களுக்குத் தேவையானவற்றை அறிந்து உடனடியாக நிறைவேற்றித் தருமாறு மகளிர் அணியினருக்கு அறிவுறுத்தியுள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் சுப்ரியா கடந்த மாதம் 28 ம் தேதி தொலைபேசி வாயிலாக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியைத் தொடர்பு கொண்டுள்ளார். அப்போது மகாராஷ்டிரா மாநிலம், ரத்தினகிரி கிராமத்தைச் சேர்ந்த 22 வயதுப் பெண் யுவாந்தி அணில் சாகேத் என்பவர், சென்னையிலுள்ள ஐ.டி நிறுவனத்தில் பணிபுரிவதாகவும், அவருடைய அப்பா மாரடைப்பு காரணமாக இறந்துவிட்டதாகவும், அவரை உடனடியாக ஊருக்கு அனுப்பி வைக்க உதவ வேண்டுமெனக் கேட்டுக் கொண்டார்.
யுவாந்தி அணில் சாகேத் பணிபுரியும் நிறுவனத்தோடு தொடர்பு கொண்டு பேசியதில், அப்பெண்ணோடு யாராவது ஒருவர் உடன் சென்றால், அனுப்பி வைக்கிறோம் எனப் பதிலளித்துள்ளனர். இதையடுத்து யுவாந்தியை சொந்த ஊருக்குஅனுப்பி வைக்கும் நடவடிக்கையில் இறங்கினார். இந்தச் செய்தியை தி.மு.க மகளிரணி சமூக வலைதளக்குழுவில் பகிர்ந்துள்ளார்.
இதனையடுத்து சோழிங்கநல்லூர் கிழக்குப்பகுதி தி.மு.க மகளிரணி அமைப்பாளர் ந.கலைச்செல்வி, காஞ்சிபுரம் மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் ஈஸ்வரி மகள் பொன்மணி இருவரும், தந்தையை இழந்து நிற்கும் இளம் பெண்ணோடு மகாராஷ்டிரா சென்று, அவர்கள் இல்லத்தில் கொண்டுபோய் சேர்த்துவிட்டு திரும்ப முன் வந்துள்ளனர்.
இதனையடுத்து பாதிக்கப்பட்ட பெண் பணிபுரியும் நிறுவனத்தில் ஊருக்குச் செல்வதற்கான அனுமதிக்கடிதம் பெற்று அந்தப் பெண்ணோடு தி.மு.க மகளிரணி நிர்வாகிகள் இருவருமாக, மூன்று பெண்களும் செல்வதற்கு முறையான அனுமதியைப் பெற்று, மகாராஷ்டிரா மாநிலத்திற்கு அனுப்பி வைத்தார்.
நீண்ட பயணத்திற்குப் பிறகு ஏப்ரல் 29 –ம் தேதி இரவு 11.40 க்கு மூன்று பெண்களும் மகாராஷ்டிரா சென்று சேர்ந்துள்ளனர். இக்கட்டான நேரத்திலும் இளம்பெண்ணுக்கு உதவ 2,400 கிலோமீட்டர் பயணித்து, உடனிருந்து உதவிய மகளிரணியினரை கனிமொழி வாழ்த்தியுள்ளார். இருவரும் ஏப்ரல் 30-ம் தேதி காலை சென்னை வந்து சேர்ந்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்களும், மகாராஷ்டிரா நாடாளுமன்ற உறுப்பினர் சுப்ரியாவும் தி.மு.க மகளிரணியினருக்கும் கனிமொழிக்கும் தங்களது நன்றியைத் தெரிவித்துள்ளனர்.