20 நாட்கள் மருத்துவமனையில் சேவை செய்துவிட்டு வீடு திரும்பிய மருத்துவர் ஒருவரை அண்டை வீட்டார் மலர் தூவி வரவேற்ற வீடியோவை பிரதமர் மோடி பகிர்ந்து கொண்டுள்ளார்.
கொரோனா வைரசை எதிர்த்துப் போராடுவதில் மருத்துவத்துறை மற்ற அனைவரையும் தவிர ஒருபடி முன்னால் நிற்கிறது. மருத்துவர்கள் வேலையை மட்டும் செய்யவில்லை, 24 மணிநேரமும் சுற்றிச் சுழன்று சேவை செய்து வருகிறார்கள். அதுவும் தங்களின் உயிரைப் பணயம் வைத்து வேலை செய்து வருகிறார்கள். இந்தப் போரில் சைமன் போன்ற சில மருத்துவர்கள் தங்களின் உயிரையே தியாகம் செய்துள்ளனர். மேலும் பல செவிலியர்கள் கொரோனா நோய்த் தொற்று ஏற்பட்டு அதிலிருந்து மீண்டுள்ளனர்.
கடந்த 20 நாட்களுக்கு மேலாக இடைவிடாமல் மருத்துவமனையில் பணி செய்துவிட்டு வீடு திரும்பிய ஒரு பெண் மருத்துவரை அவரது குடியிருப்பில் உள்ளவர்கள் அனைவரும் சுற்றி நின்று மலர் தூவி வரவேற்ற வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது. மேலும் பலர் அவரை கைதட்டி வரவேற்கின்றனர். சில சிறுமிகள் அவரை வரவேற்கும் விதமாகப் பதாகைகளைப் பிடித்தபடி நிற்கின்றனர். இதைக் கண்ட அந்தப் பெண் மருத்துவர் செய்வது அறியாமல் கண்கள் பணிக்க மனம் குளிர்ந்து போய் நிற்கிறார். அந்த வீடியோ, பார்க்கும் பலரது மனதை நெகிழச் செய்துள்ளது. இந்த மருத்துவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ஐ.சி.யூ) பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில் பிரதமர் மோடி இந்த வீடியோவை அவரது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். இது குறித்து அவர், “இது போன்ற தருணங்கள் இதயத்தை மகிழ்ச்சியில் நிரப்புகின்றன. இது இந்தியாவின் எழுச்சி. நாங்கள் கொரோனாவை தைரியமாக எதிர்த்துப் போராடுவோம். முன்னணியில் பணியாற்றுவோர் குறித்து நாங்கள் என்றென்றும் பெருமைப்படுவோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
தற்போது இந்த வீடியோ சமூக ஊடக தளங்களில் வைரலாகியுள்ளது. இதுவரை ட்விட்டரில் மட்டும் 6 லட்சத்துக்கும் மேற்பட்ட லைக்குகளைப் பெற்றுள்ளது. தன்னலமற்ற இவரது சேவைக்காக நெட்டிசன்கள் மருத்துவரைத் தலை வணங்கி வருகின்றனர். அவரை வரவேற்ற அண்டை வீட்டாருக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.
Moments like this fill the heart with happiness.
This is the spirit of India.
We will courageously fight COVID-19.
We will remain eternally proud of those working on the frontline. https://t.co/5amb5nkikS
— Narendra Modi (@narendramodi) April 30, 2020