தோனி ஐபிஎல் விளையாடி தான் இந்திய அணிக்குள் திரும்ப வேண்டும் என்பது தவறான கருத்து என இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி கடந்த 2019ஆம் ஆண்டு உலகக் கோப்பை அரையிறுதிக்குப் பின்னர் இந்திய அணிக்காக எந்தப் போட்டியிலும் விளையாடவில்லை. இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் அவர் விளையாடுவார், அதைப் பொறுத்து டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் சேர்க்கப்படுவார் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்த கருத்தை இந்திய அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரரான ஆகாஷ் சோப்ரா முற்றிலும் மறுத்துள்ளார். அவர் கூறும்போது, “தோனி ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவதைப் பொறுத்துதான் அவர் மீண்டும் இந்திய அணிக்குள் சேர்க்கப்படுவார் என்ற தவறான கணிப்பு ஒன்று உள்ளது. அப்படியில்லை.
ஒருவேளை தோனியை அணியில் சேர்ப்பது என்றால், அவர் எப்படிப்பட்ட கிரிக்கெட் வீரர் என்பதும், அவரது கிரிக்கெட் அனுபவம் குறித்தும், அவர் ஒரு கிரிக்கெட்டராக சாதித்தது பற்றியும் அனைவருக்கும் தெரியும். அதன் அடிப்படையில் தான் அவரை தேர்வு செய்வார்களே தவிர, ஐபிஎல் மூலம் அவர் தேர்வு செய்யப்படுவார் என்பது முற்றிலும் தவறு” என்று குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், “தோனி இந்திய அணிக்கு தேவை என அணியின் நிர்வாகம் நினைத்தால், அதேசமயம் இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என தோனி நினைத்தால் அது நடக்கும். ஐபிஎல் போட்டியில் அவர் விளையாடுவதைப் பொறுத்து தான் டி20 உலகக் கோப்பைக்கான போட்டியில் சேர்ப்பார்கள் என்றில்லை. என் கணிப்புப்படி டி20 உலகக் கோப்பை தள்ளிப்போகும். இதனால் தோனிக்கு மேலும் ஒரு வயது அதிகரிக்கும். அத்துடன் அவர் விளையாடாத காலம் 18 மாதங்கள் ஆகும். அதன் அடிப்படையில் வேண்டுமானால் அவரை அணியில் தேர்வு செய்யாமல் விடலாம்” என்று கூறியுள்ளார்.