கொரோனாவிலிருந்து மீண்டவர்களை அந்நோய் மீண்டும் தாக்காது என்பதற்கான ஆதாரம் இதுவரை இல்லை என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
உலகளவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 30 லட்சத்தை நெருங்கி வருகிறது. பலி எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியுள்ளது. மேலும் கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 83 ஆயிரத்தை கடந்துள்ளது.
கொரோனாவிலிருந்து மீண்டவர்கள் பணிக்கு திரும்பவும், பணி நிமித்தம் காரணமாக வெளிநாடுகளுக்கு செல்வதை அனுமதிக்கவும் ஏதுவாக சில நாடுகள் அவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்க திட்டமிட்டுள்ளன. கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் உடலில் கொரோனாவுக்கு எதிரான ஆண்டிபாடிகள் உருவாகியிருக்கும் என்பதால் அவர்கள் உடனடியாக பணிக்கு திரும்பலாம் என்றும் சிலி அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இதற்கு உலக சுகாதார நிறுவனம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. கொரோனாவிலிருந்து மீண்டவர் முறையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடிக்காவிட்டால் மீண்டும் அவர் நோய் தொற்றுக்கு ஆளாவதோடு, அவரால் பிறகு நோய் பரவும் அபாயமும் அதிகமுள்ளது என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.