கோவை ஆலாந்துறை அடுத்த வடிவேலாம்பாளைய சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஒரு ரூபாய் இட்லி பாட்டி என்றால் அவ்வளவு பிரபலம். 85 வயதாகும் கமலாத்தாள், இந்த தள்ளாத வயதிலும் அடுப்பு புகையின் நடுவே, ‘ஆவி’ பறக்க சுழன்று வருகிறார். கணவரை இழந்த நிலையில் தனியாகவே இட்லி கடை நடத்திவரும் கமலா பாட்டி, முப்பது ஆண்டுகளுக்கு முன் 25 பைசாவுக்கு ஒரு இட்லி என்று விற்பனையை தொடங்கினார். விலைவாசி உயர்வால் பத்து ஆண்டுகளுக்கு முன்தான் இட்லி விலையை ஒரு ரூபாயாக உயர்த்தினார் இந்த பாட்டி.
இட்லி மாவை கிரைண்டரில் அரைப்பது, கல் உரலில் சட்னி வகைகளை அரைப்பது என பம்ரபரமாக சுழன்று வரும் கமலாபாட்டிக்கு ரசிகர்கள் அதிகம். சொந்த பக்குவத்தால் தயாரித்த மசாலாவைக் கொண்டு கமலா பாட்டி சமைக்கும் சாம்பாருக்கு அடிமையான வாடிக்கையாளர்கள் ஏராளம்.
இந்நிலையில் கொரோனாவால் உலகமே தள்ளாடிக்கொண்டிருக்கும் நிலையிலும் கமலா பாட்டி, இட்லியின் விலையை உயர்த்தவில்லை. அதே ஒருரூபாய்க்கு விற்பனை செய்து வருகிறார். சொந்த ஊருக்கு போக முடியாமல் தமிழகத்தில் சிக்கியுள்ள வெளிமாநில தொழிலாளர்கள் பலரும் தற்போது கமலாத்தாள் பாட்டியின் கடையில் தான் சாப்பிடுகின்றனர்
இது குறித்து இந்தியா டுடே நாளிதழுக்கு பேட்டி கொடுத்த கமலா பாட்டி, கொரோனாவுக்கு பிறகு நிலைமை சற்று கடினமாக இருப்பதாகவும், ஆனாலும் இட்லியின் விலையை உயர்த்தப்போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார். மேலும் பல்வேறு தரப்பினரும் தனக்கு உணவுப்பொருட்கள் கொடுத்தும், அத்தியாவசியத் தேவைகளுக்கும் உதவி செய்தும் வருகின்றனர். அதனால் தன்னால் ஒரு ரூபாய்க்கு கொடுக்க முடியும் என தெரிவித்துள்ளார்.