தர்மபுரி மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட லாரி ஓட்டுநர் உடன் பயணித்த மற்றொரு ஓட்டுநருக்கு கிருஷ்ணகிரியில் கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது.
தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் அருகே செலவடை கிராமத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டு அவர் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். அவரது கிராமம் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர மருத்துவ சோதனைகள் செய்யப்பட்டு கிருமிநாசினிகள் தெளிக்கப்பட்டு வருகிறது.
நோய்த்தொற்று ஏற்பட்ட ஓட்டுநருடன் தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே நரிப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த மற்றொரு ஓட்டுநர் பயணித்ததாக தெரிகிறது. அவர் கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே உள்ள கோத்தி ஆழகனூர் கிராமத்தில் உள்ள தனது மனைவி குழந்தைகளை பார்க்க சென்றதாக கூறப்பட்டது. அங்கு விசாரணை நடத்தியதில் கிராம மக்கள் அவரை உள்ளே அனுமதிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனால் சொந்த ஊருக்கு சென்றுள்ளார். அங்கும் அவரை கிராம மக்கள் அனுமதிக்காத சூழ்நிலையில் அவர் திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே இருக்கக்கூடிய மலையில் உள்ள வனப்பகுதியில் பதுங்கி இருந்தார். அவரை தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.
இதனிடையே நேற்று இரவு 11 மணி அளவில் திருவண்ணாமலை போலீசார் மேற்கண்ட ஓட்டுநரை கைது செய்தனர். 108 ஆம்புலன்ஸ் மூலம் அவரை அழைத்து வந்து கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். கொரோனா தனி வார்டில் சிகிச்சை பெற்று வரும் ஓட்டுநருக்கு இன்று காலை கொரோனா பரிசோதனைக்காக ரத்தம் மற்றும் சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இவருடன் பயணித்த ஓட்டுநர் உறுதி செய்யப்பட்ட நிலையில் இவருக்கும் கொரோனா தொற்று இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது. ஆனால், மருத்துவ பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை என உறுதியானது. இருப்பினும் 7 நாட்களுக்கு பிறகு மீண்டும் பரிசோதனை செய்யப்படும் ஆட்சியர் பிரபாகர் தெரிவித்தார்.