இனியும் தோனி இந்தியாவுக்காக விளையாடமாட்டார் என்று சிஎஸ்கே வீரரும் இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளருமான ஹர்பஜன் சிங் தடாலடியாகக் கருத்து தெரிவித்துள்ளார்.
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்குப் பின்பு இந்திய அணியின் தோனி, சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஏதும் விளையாடவில்லை என்றாலும் அவரைப் பற்றிய விவாதங்கள் தொடர்ந்துகொண்டேதான் இருக்கின்றன. அதுவும் தோனி எப்போது ஓய்வை அறிவிப்பார் என்று பலரும், அவர் ஓய்வை அறிவிக்கக் கூடாது என்று சிலரும் பல கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். ஆனால் தோனி ஐபிஎல் போட்டிகளைக் குறிவைத்து பயிற்சி மேற்கொண்டு வந்தார். இந்நிலையில் கொரோனா அச்சம் காரணமாக ஐபிஎல் போட்டிகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.
இப்போது ஊரடங்கு காலம் என்பதால் கிரிக்கெட் வீரர்கள் பலர் சமூகவலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக செயல்பட்டு வருகின்றனர். மேலும் பலர் ரசிகர்களிடையே நேரடியாகக் கலந்துரையாடி வருகின்றனர். பலர், கொரோனா வைரஸ் தடுப்புக்கான விழிப்புணர்வு வீடியோக்களையும் வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் ஹர்பஜன் சிங் மற்றும் ரோகித் சர்மா இடையே இன்ஸ்டாகிராமில் உரையாடிக்கொண்டு இருந்தனர். அப்போது ரசிகர் ஒருவர் “எப்போது தோனி இந்திய அணிக்குத் திரும்புவார்” என்ற கேள்வியை எழுப்பியிருந்தார்.
அதற்குப் பதிலளித்த ரோகித் சர்மா “இந்தக் கேள்வியை தோனியிடமே கேட்டுவிடுங்கள், அவருக்கு என்னதான் ஆச்சு என்று தெரியவில்லை” எனப் பதிலளித்தார். இதற்குப் பதிலளித்த ஹர்பஜன் சிங் “உங்களுக்கு தோனி இந்திய அணிக்காக விளையாடுவாரா? மாட்டாரா என்று தெரிய வேண்டும் அவ்வளவுதானே. என்னைப் பொறுத்தவரை, அவர் இந்தியாவுக்காக மீண்டும் விளையாட வேண்டும் என நினைக்கவில்லை. 2019 உலகக் கோப்பை போட்டிதான் இந்தியாவுக்காக தான் விளையாடிய கடைசிப் போட்டி என அவருக்குத் தெரியும்” எனக் கூறியுள்ளார்.