பாகிஸ்தான் பிரதமரிடம் கொரோனா நிதி நிவாரணத்திற்கான காசோலையை கொடுத்த நபருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பாதித்துள்ளது. அந்த வகையில் இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானில் கொரோனா வைரஸ் பாதிப்பு 10 ஆயிரத்தை நெருங்கிவிட்டது. இதுவரை அங்கு 209 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மற்ற நாடுகளைப் போன்றே பாகிஸ்தானும் தொழிலதிபர்கள், பிரபலங்கள் உள்ளிட்டோரிடம் இருந்து நிவாரண நிதியை பெற்று வருகின்றது.
அதிகமாக நிதி கொடுப்பவர்கள் நேரடியாக பிரதமர் இம்ரானிடம் காசோலையை வழங்கி வந்தனர். அதன்படி, கடந்த 15ஆம் தேதி எதி ஃபண்டேஷன் நிறுவனர் ஃபைஷல் எதி என்பவர் இம்ரான் கானிடம் 10 மில்லியன் பாகிஸ்தான் பணத்தை வழங்கினார். இஸ்லாமாபாத்தில் உள்ள பிரதமரின் வீட்டில் இந்த காசோலை வழங்கப்பட்டது. அப்போது பிரதமர் இம்ரான் மற்றும் ஃபைஷல் ஆகிய இருவருமே முகக் கவசமோ அல்லது கையுறைகளையோ அணியவில்லை.
இந்நிலையில், ஃபைசல் எதிக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவரது இஸ்லாமாபாத்தில் உள்ள வீட்டில் தனிமைப் படுத்தப்பட்டிருக்கிறார். அவரை மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர். அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் பிரதமர் இம்ரான் கானுக்கும் தற்போது கொரோனா பரிசோதனை செய்யப்பட்டிருக்கிறது. அதன் முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை. இம்ரான் கான் கொரோனா பரிசோதனைக்கு சம்மதம் தெரிவித்ததில் மகிழ்ச்சி என அந்நாட்டு மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.