ஊரடங்கு உத்தரவினால் வீட்டை விட்டு வெளியேற முடியாத சச்சின் தனக்குத் தானே முடிவெட்டுக் கொள்ளும் புகைப்படத்தை இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார்.
இந்திய கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர். இவர் கடந்த 2013 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார். விளையாடுவதைத்தான் சச்சின் நிறுத்தினார். ஆனால் அவருக்கும் கிரிக்கெட் உலகிற்கும் உள்ள உறவு இன்னும் சிறப்பாகவே இருந்து வருகிறது. மேலும் அவர் சமூக ஊடகங்கள் மூலம் தனது ரசிகர்களிடம் தொடர்ந்து உரையாடி வருகிறார். சச்சின் ஆட்டத்திற்கு எனத் தனி ரசிகர்கள் எப்படி உலகம் முழுக்க இருக்கிறார்களோ அதே போல அவரது ஹேர்ஸ்டைலை ரசிப்பதற்கு என்று பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது.
இந்நிலையில், சச்சின் டெண்டுல்கர் புதிய ஹேர்ஸ்டைலுடன் உள்ள ஒரு புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொண்டுள்ளார். சச்சின் டெண்டுல்கரின் இந்தப் புதிய ஹேர்ஸ்டலை பற்றிய சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், அவர் தனக்குத் தானே முடிவெட்டிக் கொண்டுள்ளார். இது குறித்து சச்சின், “சதுர வட்டை தோற்றத்தில் சொந்தமாக முடிவெட்டிக் கொண்டேன். இதைப்போல் வித்தியாசமாகச் செய்வதை எப்போது அனுபவித்து இருக்கிறேன். எப்படி இருக்கிறது எனது புதிய தோற்றம்?” என்று கூறியுள்ளார். இதனுடன் கண்ணாடி முன் நின்று அவர் முடிவெட்டிக் கொள்ளும் படத்தையும் இணைத்துள்ளார். இந்தியாவுக்காக 100 சர்வதேச சதங்களை அடித்த வீரருக்கு அவரது ரசிகர்கள் அழகான கருத்துகளை வாரி வழங்கி வாழ்த்தி வருகின்றனர்.
இந்தியா முழுவதும் ஊரடங்கு நிலவுவதால் மக்கள் வெளியே போக முடியாமல் வீட்டிலேயே முடங்கியுள்ளனர். ஆகவே பலர் முடிவெட்டிக் கொள்ளுதல் போன்ற சுயத் தேவைகளை அவர்களே செய்து கொள்ள வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர். அதன் ஒரு பகுதியாகவே சச்சின் தனக்குத் தானே முடிவெட்டிக் கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. சமீபத்தில்தான், சச்சின் டெண்டுல்கர் ஊரடங்கினால் உணவின்றித் தவிக்கும் 5000 பேருக்கு ஒரு மாதத்திற்கு உணவளிப்பதாக உறுதியளித்தார். மேலும் அவர் மகாராஷ்டிராவின் முதல்வர் நிவாரண மற்றும் பிரதமர் நிவாரண நிதிக்கு தலா ரூ.25 லட்சம் நன்கொடை அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.