கோவையில் உடல் முழுவதும் காயத்துடன் சிறுவன் உயிரிழந்த நிலையில் தாயிடம் போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நீலகிரி மாவட்டம் கூடலூரைச் சேர்ந்த திவ்யா என்ற பெண் தனது 6 வயது மகன் அபிஷேக் மற்றும் 3 வயது மகளுடன் இரண்டு மாதத்திற்கு முன்புதான் கோவை மாவட்டம் கோவில்மேடு பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து குடியேறியுள்ளார். அவருடன் கணவர் அல்லாத ஒருவரும் (ராஜதுரை) தங்கியதாக தெரிகிறது. இருவருக்கு தகாத உறவு இருந்ததாக கூறப்படுகிறது. நேற்று சிறுவன் அபிஷேக் குறும்பு செய்ததால் கடுமையாக அடித்த தாய், உடலில் வீக்கம் ஏற்பட்டதால் மருந்தகத்தில் தானாக சென்று வலி நிவாரணி வாங்கி சிகிச்சை கொடுத்துள்ளார்.
இதைத்தொடர்ந்து இன்று காலை முதல் சிறுவன் மயக்க நிலையில் இருந்ததால், பிற்பகலில் 108 ஆம்புலன்ஸ் வாகனத்தை திவ்யா அழைத்துள்ளார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 108 ஆம்புலன்ஸ் செவிலியர்கள் சிறுவனை சோதனையிட்டதில், ஏற்கெனவே உயிரிழந்தது தெரியவந்துள்ளது.
இதையடுத்து 108 ஆம்புலன்ஸ் செவிலியர்கள் சந்தேகத்தின் பேரில் காவல்துறையினருக்கு தகவலளித்துள்ளனர். சிறுவனின் உடலை மீட்ட காவல்துறையினர் உடல் முழுவதும் பழுப்பால் அடித்த காயம், சிறுவனை சித்தரவதை செய்த காயம் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து சிறுவனின் தாயையும், உடனிருந்த நபரையும் பிடித்து சாய்பாபா காலனி காவல்நிலையத்தில் வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தகாத உறவுக்கு இடையூறாக இருந்ததால் சிறுவன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.