கொரோனாவை சீனா தெரிந்தே பரப்பியிருந்தால் அதற்கான விளைவை சந்திக்க நேரிடும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சீனாவில் தொடங்கிய கொரோனா இன்று உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. குறிப்பாக அமெரிக்கா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே கொரோனா விவகாரத்தில் அமெரிக்காவும், சீனாவும் கருத்து மோதல்களில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், தெரிந்தே கொரோனாவை சீனா பரப்பியிருந்தால் அதற்கான விளைவை சந்திக்க நேரிடும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வெள்ளை மாளிகையில் செய்தியாளர்கள் சந்திப்பின் போது பேசிய அதிபர் ட்ரம்ப், சீனாவுக்கே தெரியாமல் கொரோனா பரவியிருந்தால் அது தவறல்ல. ஆனால் தெரிந்தே கொரோனாவை சீனா பரப்பியிருந்தால் அதற்கான விளைவை சந்திக்க நேரிடும். இது கட்டுக்குள் கொண்டுவர இயலாமல் போனது எதார்த்தமான தவறா அல்லது வேண்டுமென்றே செய்யப்பட்டதா? இவை இரண்டிற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. இப்பிரச்னை குறித்து சீனா ஆய்வு செய்வதாக கூறியுள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம். அமெரிக்காவும் ஆய்வு செய்துகொண்டிருக்கிறது என தெரிவித்தார்.
ஏற்கெனவே இது குறித்து பேசியிருந்த சீன வெளியுறவுத்துறையின் செய்தித்தொடர்பாளர், அமெரிக்க ராணுவம் இந்த வைரஸை சீனாவிற்கு கொண்டு வந்திருக்கலாம் என தெரிவித்திருந்தார். சில தினங்களுக்கு முன்பு ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்த ட்ரம்ப், சீனாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அமெரிக்காவைவிட அதிகமாகவே இருக்கக்கூடும் என்று கூறியிருந்தார். இதற்கு விளக்கம் அளித்திருந்த சீனா, கொரோனா புள்ளி விவரங்களில் சீனா எவ்வித மோசடியும் செய்யவில்லை என தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.