கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கையை கூறியதில் எவ்வித மோசடியும் இல்லை என சீனா கூறியுள்ளது. அதேநேரத்தில், சீனாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அமெரிக்காவைவிட அதிகமாகவே இருக்கக்கூடும் என டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
சீனாவின் வூகான் நகரில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை 1290 வரை உயர்த்தி கூறியுள்ளது சீனா. இதையடுத்து சீனாவின் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 3300களில் இருந்து 4600க்கும் மேலாக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 82 ஆயிரத்தை தாண்டியுள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கையை திடீரென ஆயிரத்துக்கும் மேல் சீனா உயர்த்தி அறிவித்தது, உலக நாடுகள் இடையே பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், அமெரிக்காவைவிட சீனாவில் அதிகமானோர் உயிரிழந்திருக்கக்கூடும் என தெரிவித்துள்ளார். இதனிடையே விளக்கம் அளித்துள்ள சீனா வெளியுறவுத்துறை, கொரோனா புள்ளி விவரங்களில் சீனா எவ்வித மோசடியும் செய்யவில்லை என தெரிவித்துள்ளது.
மருத்துவமனையில் உயிரிழந்தவர்கள், வீட்டில் உயிரிழந்தவர்கள் என அனைத்து விவரங்களும் சரிபார்த்து திருத்தி அறிவிக்கப்பட்டுள்ளதாக சீனா கூறியுள்ளது. சீனாவின் கருத்துக்கு உலக சுகாதார அமைப்பும் ஆதரவு அளித்துள்ளது. ஜெனிவாவில் செய்தியாளர்களிடம் பேசிய அந்த அமைப்பின் தொற்றுநோயியல் நிபுணர் மரியா வான், வூகானில் பலர் வீடுகளில் உயிரிழந்ததாகவும், அதை பதிவு செய்ததில் காலதாமதம் ஏற்பட்டதாகவும் கூறினார்.
மேலும், இறுதிச் சடங்குகள் நடைபெற்ற இடங்களிலிருந்து பெறப்பட்ட தகவல்கள், பரிசோதனை மையங்களில் இருந்து பெறப்பட்ட தரவுகள் ஆகியவற்றின் அடிப்படையில், சீனா உயிரிழப்பு எண்ணிக்கையை மாற்றியுள்ளதாகவும் மரியா வான் கூறினார்.
திருவண்ணாமலை: குகையில் பதுங்கியிருந்த சீன வாலிபர்: வெளிவந்த கொரோனா பரிசோதனை முடிவு