அரசின் நடவடிக்கையால் தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்துள்ளதாக முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்ச்சர் பழனிசாமி கொரோனா குறித்த தகவல்களை வெளியிட்டார். தமிழகத்தில் இன்று 25 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறினார். தமிழகத்தில் அரசின் நடவடிக்கையால் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்துள்ளதாக கூறியுள்ளார். அடுத்தடுத்த நாட்களில் கொரோனா வைரஸ் முற்றிலும் குறையும் என்றும், 4 அல்லது 5 நாட்களில் யாருக்கும் கொரோனா பாதிப்பு புதிதாக இல்லை என்ற நிலை உருவாகும் என நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
65 லட்சம் மூன்றடுக்கு முகக்கவசங்கள் இருப்பதாகவும், 3 லட்சம் ‘என்95’ முகக்கவசங்கள் உள்ளதாகவும் கூறினார். இந்தியாவில் எந்த மாநிலத்திற்கும் இன்னும் ரேபிட் கிட் வரவில்லை என்று கூறிய அவர், தமிழகத்திற்கு தேவையான நிதியை மத்திய அரசிடம் கேட்டுள்ளதாக தெரிவித்தார். காய்கறிகளின் விலையை அரசு கட்டுப்பாட்டில் வைத்துள்ளதாகவும், காய்கறிகளின் விலை உயர்ந்துவிட்டதாக எதிர்க்கட்சிகள் பொய் கூறுவதாகவும் குறிப்பிட்டார்.
சென்னையில் 4,900 தள்ளுவண்டிகள் மூலமாக காய்கறிகள் விநியோகம் செய்யப்படுவதாக தெரிவித்தார். மேலும் தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 118 லிருந்து 180 ஆக உயர்ந்திருப்பதாக கூறினார். கொரோனா வைரஸில் கூட திமுக அரசியல் செய்வதாகவும், அது கவலை அளிப்பதாகவும் தெரிவித்துக்கொண்டார்.