கேப்டன்ஷிப்பை பொருத்தவரை தோனியும், சவுரவ் கங்குலியும் ஒன்று போலவே செயல்பட்டார்கள் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் ஜாகீர் கான் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் சிறந்த கேப்டன் யார் என்ற விவாதம் சமூக வலைத்தளத்தில் இன்று வரை தொடர்ந்துக் கொண்டுதான் இருக்கிறது. சில ரசிகர்கள் கங்குலிதான் என்றும் சிலர் தோனிதான் என்றும் விவாதித்துக்கொண்டு இருக்கிறார்கள். இந்நிலையில் வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கான், யூடியூப் சேனல் ஒன்றுக்கு மனம் திறந்து பேசியுள்ளார். கங்குலி தலைமையிலான இந்திய அணியில் நுழைந்த ஜாகீர் கான், தோனி தலைமையில் உலகக் கோப்பை வென்ற அணியிலும் இடம் பிடித்தவர்.
இப்போது இருவர் குறித்தும் பேசிய ஜாகீர் கான் “சர்வேதச அளவில் கிரிக்கெட் விளையாட தொடங்கும்போது கங்குலி போன்ற கேப்டன் அறிமுக வீரர்களுக்கு தேவைப்படுவார். அவரின் உந்துதலும் ஊக்கமும் என்னைப் போன்ற வீரர்கள் சிறப்பாக பங்காற்றவும் பரிணமிக்கவும் காரணம். கங்குலியும், தோனியும் நீண்ட காலமாக அணியை வழி நடத்தியுள்ளார்கள். இருவரின் தலைமையின் கீழும் நிறைய மாற்றங்கள் நடந்துள்ளன” என்றார்.
மேலும் தொடர்ந்த ஜாகீர் கான் “தோனி இந்திய அணிக்கு தலைமை ஏற்றபோது சர்வதேச கிரிக்கெட்டில் அனுபவம் வாய்ந்த மூத்த வீரர்கள் இருந்தார்கள். அதனால் போட்டிகளுக்கு அவர்களை தயார் செய்ய வேண்டிய நிலை அவருக்கு ஏற்படவில்லை. ஆனால் அணியின் மூத்த வீரர்கள் ஒவ்வொருவராக ஓய்வுப் பெற தொடங்கியதும், புதிய வீரர்கள் அணிக்குள் நுழைய தொடங்கினார்கள். அப்போது கங்குலி என்ன செய்தாரோ அதைதான் தோனியும் இளைஞர்களிடம் செய்தார். இருவருமே சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணியை அடுத்தக்கட்டத்துக்கு அழைத்துச் சென்றவர்கள்” எனத் தெரிவித்துள்ளார்