அமெரிக்காவில் கொரோனா பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தொற்று பாதிப்பு உச்சத்தை தொட்டு அதனை கடந்துவிட்டதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸால் அதிகம் பாதிப்பு மற்றும் உயிரிழப்புகளை கண்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அந்நாட்டில் 24 மணிநேரத்தில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் புதிதாக தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். கொரோனா வைரசுக்கு ஒரே நாளில் சுமார் 2 ஆயிரத்து 600 பேர் உயிரிழந்ததையடுத்து அங்கு கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 28 ஆயிரத்து 326 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றின் மையமாக மாறியுள்ள அமெரிக்காவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6 லட்சத்து 36 ஆயிரத்து 350 ஆக அதிகரித்துள்ளது.
அந்நாட்டில் நியூயார்க் மாகாணம்தான் கொரோனாவால் மிக அதிக பாதிப்புகளை எதிர்கொண்டு வருகிறது. அங்கு மட்டும் 11 ஆயிரத்து 586 பேர் உயிரிழந்துள்ள நிலையில் கொரோனா வைரஸால் சுமார் 2 லட்சத்து 14 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள கலிபோர்னியா மாகாணத்திலுள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் அடுத்த ஆண்டு வரை இசை நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட மாகாணங்களுக்கு தேவையான நிதியை அதிபர் ட்ரம்ப் முறையாக வழங்குவதில்லை என ஆளுநர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். இதற்கிடையில் அமெரிக்காவின் பொருளாதாரத்தை மீட்க ஊரடங்கை தளர்த்துவது குறித்து ட்ரம்ப் இன்று அறிவிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. கொரோனாவுக்கு எதிராக போராடி வருவதற்கு பலன் கிடைத்திருப்பதாக கூறியுள்ள ட்ரம்ப், போர் தொடர்ந்து வருவதாகவும் கொரோனா பாதிப்பில் அமெரிக்கா உச்சத்தை தொட்டு அதனை கடந்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பாதிப்பின் பிடியில் சிக்கியிருக்கும் அமெரிக்க பொருளாதாரத்தை மீட்டெடுக்க அதிபர் ட்ரம்ப் 6 பேர் கொண்ட குழு ஒன்றை அமைத்துள்ளார். அதில் இந்திய வம்சாவளியினரான சுந்தர் பிச்சை, சத்தியா நாதெள்ளா, ஐபிஎம் நிறுவனத்தின் அரவிந்த் கிருஷ்ணா, மைக்ரான் நிறுவனத்தை சேர்ந்த சன்ஜய் மெஹ்ரோத்ரா, ஆப்பிள் நிறுவனத்தின் டிம் குக், ஆரேக்கல் நிறுவனத்தின் லாரி எலிசன், பேஸ்புக்கின் மார்க் ஸ்க்கர்பெர்க் ஆகியோர் இணைந்துள்ளார். இதுதவிர வேளாண், வங்கி, கட்டுமானம், பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு துறை நிபுணர்களையும் ட்ரம்ப் நியமித்துள்ளார். துறை சார்ந்த நிபுணர்கள் மிகவும் புத்திசாலிகள் என கூறியுள்ளள ட்ரம்ப், இவர்கள் தனக்கு புதிய யோசனைகளை வழங்குவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.