( கோப்பு புகைப்படம்)
சேலத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு, சிகிச்சைக்கு பின் குணமடைந்த 16 பேர் நோயை பரப்பியதாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
மத போதனைக்காக இந்தோனேசியாவிலிருந்து சேலம் வந்த 11 பேர் உட்பட 16 பேரை மாவட்ட நிர்வாகம் தனிமைப்படுத்தியது. பரிசோதனையில் இந்தோனேசியர்கள் உட்பட 5 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர்களுக்கு சேலம் அரசு மருத்துவமனையில் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சைக்கு பின் குணமடந்த 5 பேரும், தனிமைப்படுத்தப்பட வேண்டிய காலம் முடிவடைந்த 11 பேரும் மார்ச் மாதம் 11 ஆம் தேதி சேலம் வந்துள்ளனர்.
இந்நிலையில் மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தலை பொருட்படுத்தாதது, வெளிநாட்டிலிருந்து வந்த தகவலை மறைத்தது, நோய்த்தொற்றை பரப்பியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளுக்காக அவர்கள் மீது கிச்சிப்பாளையம் காவலர்கள் வழக்குப்பதிவு செய்தனர். அனைவரையும் கைது செய்த காவல்துறையினர் காணொலி காட்சி மூலம் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தினர்.
அவர்களிடம் விசாரணை நடத்திய நீதிபதி அனைவரையும் சிறையிலடைக்க உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து 16 பேரும் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்க அழைத்து செல்லப்பட்டனர்.