கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பாகிஸ்தானின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸஃபார் சர்ஃபராஸ் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது அந்நாட்டு மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
உலகெங்கிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக பாகிஸ்தானில் 5716 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை 96 பேர் கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக பாகிஸ்தான் மக்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர். மேலும் கொரோனா வைரஸ் காரணமாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஸஃபார் சர்ஃபராஸ் உயிரிழந்துள்ளார்.
1988 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான பாகிஸ்தான் வீரர் ஸஃபார் சர்ஃபராஸ், கொரோனா வைரஸ் தொற்றால் பெஷாவரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் 50 வயதான சர்ஃபராஸ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவர், கொரோனா வைரஸால் உயிரிழந்த முதல் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்.
இடதுகை பேட்ஸ்மேனான சர்ஃபராஸ், 15 முதல் தர கிரிக்கெட் ஆட்டங்களில் விளையாடி 616 ரன்கள் எடுத்துள்ளார். 6 லிஸ்ட் ஏ ஆட்டங்களிலும் விளையாடியுள்ளார். 1994 இல் அனைத்துவிதமான கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வுப் பெற்றார். இதன்பிறகு பயிற்சியாளராகப் பணியாற்றினார். இவருடைய சகோதரர் அக்தர் சர்ஃபராஸ் சமீபத்தில் புற்றுநோய் காரணமாக மரணமடைந்தார். அவர் பாகிஸ்தான் அணிக்காக 4 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடியுள்ளார். இப்போது ஸஃபார் சர்ஃபராஸ் கொரோனா வைரஸால் பலியாகி இருப்பது அந்நாட்டில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.