இந்தியாவில் கொரோனா பாதித்த முதல் மாநிலம் கேரளம். இப்போது கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் அம்மாநிலம் வெற்றியை நோக்கிப் பயணித்துக்கொண்டிருக்கிறது. கடந்த சில நாள்களாக கேரளத்திலிருந்து வரும் கொரோனா பாசிட்டிவ் எண்ணிக்கை குறைவாக உள்ளது. அதே சமயம் கொரோனா பாதித்தவர்கள் குணமடையும் நெகட்டிவ் ரிசல்ட்டின் எண்ணிக்கை அதிகரித்தவண்ணம் உள்ளது. கடந்த 10-ம் தேதி 7 பேருக்குக் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. ஆனால், 27 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்தனர். அதுபோல கடந்த 11-ம் தேதி 10 பேருக்குக் கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருந்தது. அதே சமயம் 19 பேர் குணமாகினர். 228 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்த நிலையில் நேற்று (ஏப்.12) 2 பேர் கொரோனா பாதித்த நிலையில், 36 பேருக்குக் கொரோனா சரியானது. இதையடுத்து 228 என்ற நோயாளிகளின் எண்ணிக்கை 194 ஆக குறைந்துள்ளது.

தொடர்ந்து அதிக எண்ணிக்கையில் கொரோனா நோயாளிகளுக்கு நெகட்டிவ் ரிசல்ட் ஏற்படுவதும், பாசிட்டிவ் எண்ணிக்கை குறைவதாலும் கேரளம் சற்று ஆசுவாசமடைந்துள்ளது. கேரளத்தில் இதுவரை 373 பேரை கொரோனா பாதித்துள்ளது. அதில் 179 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். இப்போது 194 பேர் சிகிச்சையில் உள்ளனர். விரைவில் நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கையை விட குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.சைலஜா டீச்சர் கூறுகையில்,“கேரளத்துக்கு இன்று சற்று ஆசுவாசமான நாள். கொரோனா பாதித்த 36 பேர் இன்று குணமடைந்துள்ளனர். கேரளத்தில் இதுவரை 179 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். இப்போது 194 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று இரண்டு பேர் கொரோனா பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் ஒருவர் துபாயிலிருந்து வந்தவர் மற்றொருவர் சார்ஜாவிலிருந்து வந்தவர். மாநிலம் முழுவதும் 1,16,941 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் உள்ளனர். அதில் 816 பேர் மருத்துவமனை கண்காணிப்பில் உள்ளனர்” என்றார்.

இதுஒருபுறம் இருக்க, “லாக் டவுன் ஏப்ரல் 30 வரை தொடர வேண்டும் எனவும் வெளிநாடுகளில் இருக்கும் மலையாளிகளுக்குக் கொரோனா நோய் பாதித்த நிலவரம் குறித்தும், அவர்கள் நிலை குறித்தும் சரியான தகவலை வழங்க வேண்டும் எனவும் விசிட்டிங் விசாவில் போனவர்களும் பயத்தில் உள்ளனர். அவர்களை மீட்டுவர தனி விமானம் ஏற்படுத்த வேண்டும்” எனவும் கேரள முதல்வர் பினராயி விஜயன் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.