தாயின் மரணச் செய்திகேட்டு 1,100 கிலோமீட்டர் பயணம் மேற்கொண்டு, தன் சொந்தக் கிராமத்தை அடைந்துள்ளார் சத்தீஸ்கர் ஆயுதப்படையில் பணியாற்றும் சந்தோஷ் யாதவ் என்ற காவலர். ‘மலைக்காடுகளில், மாவோயிஸ்ட்டுகளுக்கு இடையேயான போராட்டத்துக்கு சற்றும் குறைவில்லாதது என்னுடய பயணம்’ எனக் குறிப்பிடுகிறார் சந்தோஷ் யாதவ். இந்த ஊரடங்கு காலத்தில் தன் சொந்தகிராமத்தை அடைவது சந்தோஷுக்கு அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. சரக்கு ரயில், வாகனங்கள், படகுசவாரி எனப் பல போக்குவரத்தைப் பயன்படுத்தியே இவரால் 3 நாள்கள் கழித்து சிகாரை அடைய முடிந்துள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் சிகார்தான் சந்தோஷின் சொந்த ஊர். சத்தீஸ்கர் ஆயுதப்படையில் பணி கிடைத்ததும், மாவோயிஸ்ட்டுகள் நடமாட்டம் அதிகம் இருக்கும் பீஜப்பூர் மாவட்டத்தில் போஸ்ட்டிங் வழங்கியுள்ளனர். சந்தோஷுக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். இவரது சகோதரர் மற்றும் திருமணமான தங்கை இருவரும் மும்பையில் இருக்கின்றனர். ஊரடங்கு உத்தரவு காரணமாக அவர்களால் அம்மாவின் மரணத்துக்கு வரமுடியவில்லை. சந்தோஷின் மனைவி மற்றும் குழந்தைகள், மிர்சாபூர் கிராமத்தில் வசித்துவருகின்றனர். தாயின் மரணச் செய்தியைக் கேட்டதும் தந்தைக்கு உறுதுணையாக இருக்க அவர்களை சிகார் செல்லுமாறு கூறியுள்ளார்.
ஏப்ரல் 4-ம் தேதி, சந்தோஷுக்கு அவரது தந்தை போன் செய்து அம்மாவின் உடல்நிலை மோசமாக இருக்கிறது எனக் கூறியுள்ளார். வாரணாசியில் இருக்கும் மருத்துவமனையில் அனுமதிக்குமாறு கூறியுள்ளார். இதையடுத்து மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால், அவர் உடல்நிலை தொடர்ந்து மோசமாகிவந்துள்ளது. அம்மா இறந்துவிட்டதாக தந்தையிடமிருந்து போன் வந்துள்ளது. இந்தச் செய்தி சந்தோஷை மனத்தளவில் கடுமையாகப் பாதித்துள்ளது. உயர் அதிகாரிகளிடம் அனுமதிபெற்று, தன் ஊருக்குத் திரும்ப ஆயத்தமானார். சொந்த ஊருக்குத் திரும்பும் பயணம் இவ்வளவு கடினமானதாக இருக்கும் என சந்தோஷ் நினைத்திருக்க மாட்டார்.
‘அம்மாவின் மரணச் செய்தி கேட்டதும் எனக்கு ஊருக்குப் போக வேண்டும் என்ற எண்ணம்தான் இருந்தது. சகோதரி, சகோதரன் இருவரும் மும்பையில் இருப்பதால், அவர்களால் வரமுடியாது எனத் தெரியும். இந்தச் சூழலில், என் தந்தையை தனியே விட்டுவிட எனக்கு மனம் இடம் தரவில்லை. தலைநகர் ராய்ப்பூரை அடைந்துவிட்டால் எப்படியாவது சொந்த ஊருக்குச் சென்றுவிடலாம் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. தானியங்கள் ஏற்றிச்செல்லும் வண்டியைப் பிடித்து, பீஜப்பூரில் இருந்து ஜகதல்பூர் வந்து சேர்ந்தேன். அங்கிருந்து அடுத்த வண்டியைப் பிடிக்க இரண்டு மணி நேரம் காக்கவேண்டியிருந்தது. ஒரு மினி லாரியைப் பிடித்துக்கொண்டு வந்துசேர்ந்தேன். கொண்டகனில் இருந்து ராய்ப்பூர் 200 கிலோ மீட்டர். அங்கிருந்த காவலர்களால் தடுத்து நிறுத்தப்பட்டேன்.
Also Read: `ஏன் பீலா ராஜேஷ் பதிலளிப்பதில்லை?’ -தலைமைச் செயலாளரை மிரள வைத்த கேள்வி
நான் என்னுடைய சூழலை அவர்களுக்கு விளக்கினேன். நல்லவேளையாக அங்கிருந்த உயர் அதிகாரி எனக்கு ஏற்கெனவே தெரிந்திருந்தால் மருந்து ஏற்றிச்செல்லும் வாகனத்தில் என்னை ஏற்றிவிட்டார். ராய்ப்பூர் வந்ததும் ஆர்.பி.எஃப் பணியாற்றும் என் நண்பனிடம் உதவிகேட்டேன். அவரது உதவியில் நான் சரக்கு ரயிலில் பயணமானேன். சுமார் 8 சரக்கு ரயில்களில் பயணம் செய்து, ஏப்ரல் 10-ம் தேதி காலையில் சுனார் வந்தடைந்தேன்.
என்னுடைய கிராமத்துக்கு மிக அருகில் இருப்பது சுனார் ரயில் நிலையம்தான். ரயில் பயணம் முடிந்து அங்கிருந்து 5 கிலோமீட்டர் நடைபயணமாக கங்கா நதியை வந்தடைந்தேன். படகு மூலம் என் சொந்த கிராமத்துக்கு வந்து சேர்ந்தேன். ஊரடங்கு உத்தரவு காரணமாக நான் வரும் வழியெங்கும் ஏராளமான இடங்களில் போலீஸார் மற்றும் ரயில்வே அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டேன்.
என்னுடைய நிலையை அவர்களுக்கு நான் எடுத்துக்கூறியதும் மனிதாபிமான அடிப்படையில் மேற்கொண்டு செல்ல எனக்கு அனுமதி அளித்தனர். என்னுடைய கிராமத்தைச் சேர்ந்த நிறைய பேர் ரயில்வேயில் பணியாற்றுகின்றனர். அவர்கள் எனக்கு உதவி புரிந்தனர். இந்த இக்கட்டான நேரத்தில் எனக்கு உதவிபுரிந்த அனைவருக்கும் நன்றி. ஊரடங்கு உத்தரவை நான் மதிக்கிறேன். மக்களின் பாதுகாப்புக்காகத்தான் இந்த உத்தரவே பிறப்பிக்கப்பட்டுள்ளது’’ என்றார்.
Also Read: `ராட்சதச் சவக்குழிகள்; அடுக்கடுக்காக சவப்பெட்டிகள்’- ஹார்ட் தீவுகளில் புதைக்கப்படும் சடலங்கள்