இத்தாலி நாட்டில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளித்த 100 மருத்துவர்கள் உயிர்த் தியாகம் செய்துள்ளனர்.
கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கிய நாடுகளில் முக்கியமான ஒன்று இத்தாலி. அங்கு கொரோனா பாதிப்பால் 17,600க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். கொரோனா பாதித்த நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்க முடியாமல் இத்தாலி அரசு திணறி வருகிறது. இதனால் நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்க ஓய்வு பெற்ற மருத்துவர்களுக்கும் அழைப்பு விடுத்திருந்தது. இதைத்தொடர்ந்து இத்தாலியில் கொரோனா வைரஸால் மருத்துவர்கள் நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டு உயிரிழந்து வந்தனர்.
இந்நிலையில் கொரோனாவால் இத்தாலியில் 100 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர். அத்துடன் ஏற்கெனவே 30 மருத்துவ ஊழியர்கள் மற்றும் செவிலியர்கள் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நூறு மருத்துவர்களின் இறப்பு அங்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா வைரஸுக்கு எதிராகப் போராடும் மருத்துவர்களுக்கு உரிய உபகரணங்களைக் கொடுக்க வேண்டும் என இத்தாலி சுகாதாரத்துறை சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொரோனாவிற்கு எதிராக போதிய உபகரணங்கள் இன்றி மருத்துவர்களைப் போராடச் செய்வது, ஆயுதமின்றி போரிடுவதற்குச் சமம் என்று இத்தாலி சுகாதாரத்துறை குறிப்பிட்டுள்ளது.