கொரோனா பாதிப்பில் தமிழகம் 2வது இடத்தில் இருந்தும் மத்திய அரசு ஏன் அதிக நிதி ஒதுக்கவில்லை ? என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
இந்தியாவில் மட்டும் 5,360 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 164 பேர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர். இந்தியாவிலேயே கொரோனா பாதிப்பில் 2வது இடத்தில் தமிழகம் உள்ளது. தமிழகத்தில் நேற்றைய நிலவரப்படி 690 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், ஊரடங்கிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டவர்கள் அனைவருக்கும் கொரோனா தொற்று பரிசோதனை செய்ய வேண்டுமென இந்தியா அவேக் பார் டிரான்ஸ்பரன்சி என்ற அமைப்பின் இயக்குனர் ராஜேந்தர் குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை நீதிபதிகள் கிருபாகரன், ஹேமலதா அமர்வு விசாரித்தது. அப்போது கருத்து தெரிவித்த நீதிபதிகள், “கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் உறவினர்கள், வெளிநாடு சென்று வந்தவர்களின் உறவினர்கள் தாமாக முன்வந்து பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். முன்வர தவறினால் அவர்களை கட்டாயப்படுத்தலாம்.
144 தடை உத்தரவை மீறி தேவையில்லாமல் வெளியில் வருபவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்ய வேண்டும். ஓட்டுநர் உரிமத்தை இடைநீக்கம் செய்ய வேண்டும். அவர்களது நிறுவனங்களின் தகவலை பெற்று உண்மைத்தன்மையை ஆராய வேண்டும்என்று உத்தரவிட்டனர்.
மேலும், கொரோனா பாதிப்பில் 2ஆம் இடத்தில் இருக்கும் தமிழகத்திற்கு மத்திய அரசு அதிக நிதியை ஒதுக்காதது ஏன் ? என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இதுதொடர்பாக மத்திய அரசு பதிலளிக்க இரண்டு வார அவகாசம் வழங்கி உத்தரவிட்டனர்.