உலகம் முழுக்க தீவிரமடைந்துவரும் கொரோனா தொற்று, இதுவரை பல்லாயிரக்கணக்கான உயிர்களைப் பலி வாங்கியிருக்கிறது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமல்லாமல், அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுக்கும் தொற்று ஏற்படுவது அதிகரித்திருக்கிறது.
அதனால் உலகம் முழுக்க முகக்கவசம், முழு உடல் கவசம், வென்டிலேட்டர் போன்றவற்றுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. இந்தச் சூழலில், புதுச்சேரியில் கொரோனா தொற்று தடுப்பு உபகரணங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளை அமைக்கும் நிறுவனங்களுக்கு சலுகைகள் அளிக்கப்படும் என்று முதல்வர் நாராயணசாமி அறிவித்திருக்கிறார்.
புதுச்சேரி மாநிலத்தில், இதுவரை 6 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில், ஒருவர் குணமடைந்து வீடு திரும்பிவிட்டார். தொடர்ந்து புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் பகுதிகளில் சந்தேகத்துக்குரியவர்களைத் தனிமைப்படுத்தி கண்காணித்துவருகின்றனர். நிதி நெருக்கடியால் கொரோனா வைரஸை எதிர்கொள்ள முடியாமல் புதுச்சேரி மாநிலம் தவித்து வருகிறது. இடைக்கால நிவாரணமாக ரூ.300 கோடியும், மொத்தமாக ரூ.995 கோடியும் நிதி வழங்க வேண்டுமென பிரதமர் மோடிக்கு முதல்வர் நாராயணசாமி கடிதம் எழுதியும் மத்திய அரசு பதிலளிக்கவில்லை.
இந்நிலையில், எளிய முறையில் முகக்கவசம் தயாரிப்பது எப்படி என்பது குறித்த வீடியோ ஒன்றை கிரண் பேடி சமூக வலைதளத்தில் வெளியிட்டிருக்கிறார். அந்த வீடியோவில், கழுத்துக் குட்டையை (Scarf)ப் பயன்படுத்தி முகக்கவசம் தயாரித்துக் காட்டும் அவர், “எனக்குத் தேவையான முகக்கவசத்தை நானே தயாரித்து கொண்டேன். இதற்காக மருந்தகம் செல்ல வேண்டிய அவசியமில்லை. தற்போது நான் பாதுகாப்பாக இருக்கிறேன். நீங்களும் பாதுகாப்பாக இருங்கள்” என்கிறார் அவர்.