டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் கூடிய அமைச்சரவை, பிரதமர், குடியரசுத் தலைவர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளிட்டோரின் சம்பளத்தில் 30 சதிவிகிதம் குறைக்கவும், 2 வருட எம்.பி-க்களின் தொகுதி மேம்பாட்டு நிதியை மொத்தமாக கொரோனா ஒழிப்புக்குப் பயன்படுத்த ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த முடிவுக்கு வரவேற்பும் கண்டனங்களும் எழுந்துவருகின்றன.
இதுகுறித்து நம்மிடம் பேசிய திருச்சி எம்.பி திருநாவுக்கரசர், “நாடாளுமன்ற உறுப்பினர்களின் கருத்துகளை கேட்காமல் நாடாளுமன்ற தொகுதிக்கான மேம்பாட்டு நிதியை 2 ஆண்டுகளுக்கு ரத்து செய்கிறோம் என்று அமைச்சரவையில் முடிவு எடுத்ததாகப் பிரதமர் மோடி அரசு அறிவித்திருப்பது சர்வாதிகார நடவடிக்கை.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அரசு பொறுப்பில் உள்ளோரின் சம்பளங்கள், சலுகைகள் ஆகியவற்றிலிருந்து 30 சதவிகிதம் குறைக்கப்பட்டிருப்பதை மனப்பூர்வமாக வரவேற்கிறேன்.
அதே நேரத்தில் நாடாளுமன்ற தொகுதிக்கான நிதி என்பது மக்களின் நலனுக்காக மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் ஆதாரம்.
மேலும், மக்கள் நலன் மற்றும் தேவைகளை நிறைவேற்றிட வாய்ப்பளிக்கும் நிதியை ரத்து செய்துவிட்டு, எம்.பிக்களான எங்களை மக்களிடம் மனுக்களைப் பெற்று ஆள்வோருக்கு அனுப்பக்கூடிய தபால்காரர்களாக மோடி மாற்றியிருக்கிறார்.
மத்திய அரசு கொரோனாவிலிருந்து மக்களை காப்பதற்கு ரூ.7000 கோடி அல்ல, ரூ70,000 கோடிகூட செலவிடலாம். செலவிட வேண்டும். ஆனால் தொகுதி வளர்ச்சி நிதியை ரத்து செய்திருப்பது மக்களுக்கு எம்.பிக்கள் தந்த வாக்குறுதிகளை நிறைவேற்றவிடாமல் முடக்கும் செயல் ஆகும்” என்றார்.