நாடு முழுவதும் ஏப்ரல் 14ஆம் தேதிக்குப் பின்னரும் ஊரடங்கு உத்தரவை நீட்டிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க மார்ச் 24ஆம் தேதி நள்ளிரவு முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஏப்ரல் 14ஆம் தேதி வரை மொத்தம் 21 நாட்கள் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு முடிவடைய இன்னும் 7 நாட்கள் உள்ள நிலையில், இந்த நிலை மேலும் நீட்டிக்கப்படுமா ? என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
இந்நிலையில் ஏப்ரல் 14ஆம் தேதிக்குப் பின்னரும் ஊரடங்கு உத்தரவை நீட்டிக்க மத்திய அரசு ஆலோசித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. பல்வேறு மாநில அரசுகள் மற்றும் வல்லுநர்கள் ஊரடங்கு காலத்தை நீட்டிக்கோரியுள்ள நிலையில், ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. இத்தனை நாட்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த கொரோனாவை, ஊரடங்கு நீக்கம் மேலும் அதிகரிக்கலாம் என வல்லுநர்கள் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.