டெல்லி தப்லீக் ஜமாஅத்-இல் பணியாற்றும் 25,500 உள்ளூர் தொழிலாளர்களையும் மற்றும் அவர்களுடன் தொடர்பு வைத்திருந்த நபர்களையும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெற்கு டெல்லியில் “மார்கஸ் நிஜாமுதீன்” என்ற 100 ஆண்டுகள் பழமையான கட்டிடத்தில் தப்லீக் ஜமாஅத் அமைப்பு செயல்பட்டு வருகிறது. இங்கு கடந்த மாதம் நடைபெற்ற மதக் கூட்டத்தில் வெளிநாட்டினர் உட்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். இவர்களில் பலருக்கு கொரோனா தொற்று இருப்பது சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. எனவே நோய்ப் பரவலைத் தடுக்கும் நோக்கில் இந்தக் கட்டிடம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மூடப்பட்டது.
இக் கூட்டத்தில் கலந்து கொண்ட இதன் உறுப்பினர்களில் கிட்டத்தட்ட 9,000 பேர் கொரோனா நோய்த் தொற்றுக்கான ஆபத்தில் உள்ளனர் என்று அதிகாரிகள் நம்பினர். புகார் எழுந்தவுடன் இதன் தலைவர் மவுலானா சாத் காந்தல்வி தலைமறைவானார். அவரைத் தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே அவர் சில தினம் முன்பு இரண்டு ஆடியோ பதிவை வெளியிட்டிருந்தார். அதில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக அவர் கூறியிருந்தார்.
இந்நிலையில் கொரோனா வைரஸ் நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்தும் வகையில் டெல்லி தப்லீக் ஜமாஅத்வில் பணியாற்றும் 25,500 உள்ளூர் தொழிலாளர்களையும் மற்றும் அவர்களுடன் தொடர்பு வைத்திருந்த நபர்களையும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணைச் செயலாளர் புன்யா சலிலா ஸ்ரீவாஸ்தவா , “நாங்கள் 25000 உள்ளூர் தப்லீக் ஜமாஅத் தொழிலாளர்களையும் அவர்களுடன் தொடர்பு கொண்ட நபர்களையும் தனிமைப்படுத்தியுள்ளோம். இது தவிர, ஹரியானாவில் சில டி.ஜே. மக்கள் தங்கியிருந்த ஐந்து கிராமங்களும் சீல் வைக்கப்பட்டுத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன ”என்று தெரிவித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து அவர், “இதுவரை 2,083 வெளிநாட்டு டி.ஜே ஜமாஅத் உறுப்பினர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் 1,750 பேர் தடுப்பு காவல் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். இத்தகைய நடவடிக்கைகளால் கொரோனா நோய்த் தொற்று சங்கிலியை உடைக்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம், ”என்று ஸ்ரீவஸ்தவா கூறியுள்ளார்.
நாட்டில் மொத்தம் 4,067 கொரோனா வைரஸ் நோயாளிகளில் குறைந்தது 1,445 நோயாளிகள் தப்லீக் ஜமாஅத் நிகழ்ச்சியுடன் தொடர்பு கொண்டவர்கள் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுவரை 1700க்கும் மேற்பட்ட ஜமாஅத் உறுப்பினர்கள் தடுப்புப்பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர்.