கொரோனாவால் மொத்த உலகமும் ஸ்தம்பித்து செய்வதறியாது விழிபிதுங்கி வீட்டுக்குள் முடங்கிப்போயுள்ளது. பெரும் வல்லரசு நாடான அமெரிக்காவே இந்த கொரோனா வைரஸை கட்டுப்படுத்த முடியாமல் திணறிப் பிற நாடுகளின் உதவியைக் கோரியுள்ளது. கொரோனாவால் உலகம் முழுவதும் 12 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டு 67,000-க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் மனிதக் குலம் பெரும் துயரை அனுபவித்தாலும் இதனால் சிறிய நன்மைகளும் நடந்துள்ளன.
உலக மக்களிடம் மனித நேயம் அதிகளவில் தலைதூக்கியுள்ளது, வீட்டில் இருக்காத பலரும் தற்போது தங்கள் குடும்பத்தினருடன் நேரம் செலவிடுகிறார்கள். மக்கள் நடமாட்டம் குறைந்துள்ளதால் இயற்கை புத்துயிர் பெற்றுள்ளது. தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளதால் நீர்நிலைகள் தூய்மையாகியுள்ளன, வீட்டில் இருக்கும் மக்களின் திறமை, ஆற்றல் வெளியில் வந்துள்ளது. ஒலி மாசு முற்றிலும் குறைந்துள்ளது. இவை அனைத்தையும் விடக் குறிப்பாகக் காற்று மாசு பல மடங்கு குறைந்துள்ளது.
Also Read: “1,60,000 பேரைக் கொல்லப்போகும் காற்று மாசு!” – எச்சரித்த பிரிட்டன் ஆய்வு நிறுவனம்
கொரோனா முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையாக இந்தியா முழுவதும் 21 நாள்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் சாலைகளில் வாகனப் போக்குவரத்து குறைந்து காற்று மாசுபாடு குறைந்துள்ளது. காற்று மாசால் மிகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்ட டெல்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள நகரங்கள் அனைத்திலும் தற்போது காற்று மாசு எதிர்பாராத அளவு குறைந்துள்ளது.
இதே நிலை பஞ்சாப் மாநிலத்தின் ஜலந்தர் பகுதியிலும் நிலவுவதால் அப்பகுதி மக்கள் உற்சாகமடைந்துள்ளனர். காற்று மாசு குறைந்தது மட்டும் அப்பகுதி மக்களின் மகிழ்ச்சிக்குக் காரணமில்லை இதனால் இமயமலையின் எழில்மிகு தோற்றம் தங்கள் வீட்டு மாடிகளிலிருந்தே தெரிவதால் மக்கள் மிகுந்த சந்தோசமடைந்து மலைத்தொடரின் புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
ரம்மியமான இமயமலையை எப்போது பார்த்தாலும் அழகுதான். ஆனால், ஜலந்தர் பகுதியில் சர்வ சாதாரணமாகத் தெரியும் இந்த அழகு கடந்த 25 ஆண்டுகளாகத் தெரியாமல் மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். அதிகப்படியான காற்று மாசே இதற்குக் காரணமாக கூறப்படுகிறது. தற்போது ஊரடங்கால் காற்றின் மாசுபாடு குறைந்துள்ளதால் மீண்டும் இமயமலையின் அழகை ரசிக்கத்தொடங்கியுள்ளனர் அப்பகுதி மக்கள். இந்த புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளன.