கொரோனா தொடர்பாக பிரதமர் மோடி நேற்று காலை நாட்டு மக்களிடையே உரையாற்றினார். அதில், “ ஏப்ரல் 5-ஆம் தேதி இரவு 9 மணி முதல் 9 நிமிடம் வீட்டின் விளக்குகளை அணைத்துவிட்டு, டார்ச், அகல் விளக்குகளை ஏற்ற வேண்டும். 9 நிமிடங்கள் விளக்கு ஏற்றும்போது, அமைதியாக இருந்து நாட்டு மக்கள் குறித்து சிந்தியுங்கள். செல்போன் மூலமாகவும் 9 நிமிடங்கள் ஒளியேற்ற வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.
இந்நிலையில் ஒரே நேரத்தில் அதிக மின்சாரம் பயன்பாட்டில் இருந்து நிறுத்தப்பட்டு மீண்டும் பயன்பாட்டுக்கு வரும் என்பதால் சில நடவடிக்கைகளை தமிழக மின்சார வாரியம் எடுத்துள்ளது. அதன்படி, அனைத்து செயற்பொறியாளர்கள் நாளை இரவு பணியில் இருக்க வேண்டுமெனவும் சரியாக ஒன்பது மணிக்கு மின்சாரம் சரியான அளவில் கிடைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேபோல் 9 நிமிடங்கள் கழித்து அனைவரும் விளக்குகளை எரிய விடும் பொழுது அதிக அளவில் மின் நுகர்வு ஒரே நேரத்தில் ஏற்படும் என்பதால், அதனை சரி செய்ய தயார் நிலையில் மின்மாற்றிகள் இருக்க வேண்டும் எனவும் அனைத்து செயற்பொறியாளர்களுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மாநிலம் முழுவதும் விளக்குகள் அணைக்கும்பொழுது தோராயமாக ஆயிரம் மெகாவாட் அளவிற்கு மின்சாரம் குறைய வாய்ப்பு இருப்பதாகவும் விளக்குகள் மட்டுமே அணைக்கப்படும் என்பதால் மற்ற மின்சாதனங்களான ஃபிரிட்ஜ், மின்விசிறி உள்ளிட்டவற்றை மக்கள் பயன்படுத்தலாம் எனவும் மின்சார வாரியம் விளக்கம் அளித்துள்ளது. அதேபோல மின்சாரம் துண்டிக்கப் படமாட்டாது எனவும் மின்சார வாரியம் குறிப்பிட்டுள்ளது.
“நாம் என்றோ கையில் எடுத்த டார்ச் லைட்” – பிரதமர் பேச்சை விமர்சித்த கமல்