இங்கிலாந்தில் கொரோனா வைரஸால் தீவிரமாகப் பாதிக்கப்பட்ட ஒரு நபர் தொடர் சிகிச்சையால் குணமடைந்தார்.
கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. இதுவரை 11,21,973 பேர் கொரோனா வைரஸால் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளனர். 59,403 உயிரிழந்திருக்கின்றனர். 2,30,315 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வரும் நபர்களில் 95% பேர் மிதமான அளவில் தான் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார். இருப்பினும் 5% பேர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் மிதமான பாதிப்புள்ள நபர்கள் பெரும்பாலும் குணமடைந்து வீடு திரும்புகின்றனர். ஆனால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் உயிர்பிழைப்பது அரிதாகிறது. இதனால் கொரோனாவால் கடுமையாகப் பாதிக்கப்பட்டால் உயிரிழப்பது நிச்சயம் என்ற எண்ணம் அனைவரது மத்தியிலும் வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில் அந்த வருத்தத்திற்கு நம்பிக்கையூட்டும் வகையில் இங்கிலாந்தில் கொரோனாவிலிருந்து மீண்டு ஒருவர் குணமடைந்துள்ளார். இங்கிலாந்தின் லிசெஸ்டர் நகரத்தில் கொரோனா தொற்றால் ஒருவர் பாதிக்கப்பட்டிருந்தார். அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
7 நாட்கள் தொடர் தீவிர சிகிச்சைக்குப் பின்னர் தற்போது அந்த நபர் குணமடைந்துள்ளார். இதைத்தொடர்ந்து அவர் டிஸ்சார்ஜும் செய்யப்பட்டார். அப்போது அவருக்குச் சிகிச்சை அளித்த மருத்துவக் குழுவினர் இருபுறமும் வரிசையாக நின்று கைகளைத் தட்டி உற்சாகமாக விடை கொடுத்தனர். இந்தச் சம்பவம் வீடியோவாக எடுக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோவை கொரோனா நோயாளிக்குச் சிகிச்சை அளித்த குழுவைச் சேர்ந்த ஒரு மருத்துவரின் மனைவி சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.