மகாராஷ்டிர மாநிலத்தில் 500-க்கும் மேற்பட்டவர்களை கொரோனா வைரஸ் தாக்கியுள்ளது. இந்தியாவில், இந்த மாநிலத்தில்தான் கொரோனா வைரஸ் அதிவேகமாகப் பரவி வருகிறது. கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த, அந்த மாநில அரசு தீவிர நடவடிக்கை எடுத்துவருகிறது. கொரோனாவுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர்களையும் செவிலியர்களையும்கூட வைரஸ் தாக்கும் அபாயம் உள்ளது.
இதனால், பணி முடிந்து வீடுகளுக்குத் திரும்ப மருத்துவர்கள், செவிலியர்கள் தயக்கம்காட்டிவருகின்றனர். இதையடுத்து , மும்பை மாநகராட்சி மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், டாடா குழுமத்துக்குச் சொந்தமான தாஜ் குரூப் ஹோட்டல்களில் தங்கிக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தகவலை தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சுப்ரியா சுலே உறுதிசெய்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ”கொலபாவில் உள்ள தாஜ் மற்றும் பாந்திராவில் உள்ள தாஜ் லேண்ட்ஸ் எண்ட் ஹோட்டல்களில் மருத்துவப் பணியாளர்கள் தங்கவைக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதற்காக, ரத்தன் டாடாஜிக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார். தாஜ் ஹோட்டல்களில் தங்கியுள்ள டாக்டர்கள், செவிலியர்களின் புகைப்படங்களையும் சுப்ரியா சுலே ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.
முன்னதாக, கொரோனாவுக்கு எதிராகப் போராடும் தூய்மைப் பணியாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வாங்க ரத்தன் டாடா ரூ. 500 கோடி நிதி வழங்கினார். தொடர்ந்து, டாடா சன்ஸ் அறக்கட்டளை சார்பில் மத்திய அரசின் நிவாரணப் பணிகளுக்கு ரூ.1,000 கோடி நிதி வழங்குவதாக அறக்கட்டளையின் தலைவர் என். சந்திரசேகரன் அறிவித்தார்.
Also Read: மீண்டும் விஸ்வரூபமெடுக்கும் கோவிட்-19… இரண்டாவது தாக்குதலுக்குத் தயாராகிறதா சீனா..?
மனிதாபிமானத்துடன் தன்னலமற்று சேவையாற்றும் மருத்துவப் பணியாளர்கள், நல்ல உடல் நலம், பாதுகாப்பு, மனநலத்துடன் வாழ வாழ்த்துவதாக தாஜ் குரூப் ஹோட்டல்களின் பொது மேலாளர் இந்திராணி குப்தா தெரிவித்துள்ளார்.