பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

நான் நவின் சீதாராமன், அமெரிக்கவாழ் தமிழன். தற்போது அமெரிக்காவில் டெனஸி மாகாணத்தில், சட்டனூகா எனும் நகரில் வசிக்கிறேன். இந்நகரம் சில மைல் தூரங்களில் சுமார் ஆறு மாகாணங்களை இணைக்கும் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள ஓர் அமைதியான நகரம்.

குறிப்பாக ஜார்ஜியா மாகாண தலைநகரம் அட்லாண்டா சுமார் நூறு மைல் தூரம். கொரோனாவால் மிகவும் பாதிக்கப்பட்ட நகரங்களில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நகரத்தில் ஏராளமான இந்தியர்கள் அதாவது குஜராத்தி, தமிழ், தெலுங்கு, மலையாள மற்றும் பிற மாநில மக்கள் உட்பட பல தேசத்தவரும் வசிக்கும் ஓர் அமைதியான, குற்றச்செயல்கள் அதிகமில்லாத, ஒட்டுமொத்த அமெரிக்காவில் வசிக்கச் சிறந்த பத்து நகரங்களில் ஒன்றான நகரம் இது.

நவின் சீதாராமன்

இன்றளவில் (ஏப்ரல் -1) டெனஸி மாகாணத்தில் மட்டும் கொரோனாவுக்கு 23 பேர் பலியாகி உள்ளனர். 2239 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சூழலில் மரணத்தின் பிடியில் இருக்கும் அமெரிக்காவின் பரிதாபச் சூழலை உங்கள் முன் வேதனையுடன் விவரிக்கிறேன்.

உணவகங்களை மாத்திரமே அதிகம் நம்பியிருக்கும் அமெரிக்காவில், உணவகங்கள் முழுவதுமாய் மூடப்பட்டிருக்கின்றன. வாடிக்கையாளர்கள், அவர்களுக்குத் தேவைப்படும் உணவுப் பண்டங்களை இணையத்தின் வாயிலாகக் கோருகிறார்கள். பிறகு தேவையான உணவுப் பண்டங்கள் அவர்களின் இல்லங்களில் விநியோகம் செய்யப்படுகிறது.

சமையலறைகளில் சமைப்பவர்கள் தவிர, பரிமாறுபவர்கள் பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள். காரணம், நம் நாடுபோல் பரிமாறுபவர்களுக்கு இங்கே வரையறுக்கப்பட்ட ஊதியம் கிடையாது. வாடிக்கையாளர்களின் மூலம் வரும் `டிப்ஸ்’ எனப்படும் குறைந்தபட்ச ஊக்கத்தொகை மாத்திரமே அவர்களின் மாத வருமானம். ஆனால், தற்போது உணவகங்களில் உணவு பரிமாற முழுவதுமாகத் தடை. பிறகெங்கே பரிமாறுபவர்கள் பிழைப்பது?

அமெரிக்கா

வணிக வளாகங்கள் மூடப்பட்டு விட்டன. உணவுப்பொருள்கள் அல்லாத பிற அத்தியாவசியப் பொருள்கள் விற்பனை செய்யும் சில கடைகள் வாடிக்கையாளர்களை உள்ளே அனுமதிக்காமல், அவர்களுக்கு வேண்டிய பொருள்களை இணையத்தின் வாயிலாகக் கோரச் செய்து, அவைகளை கடைகளின் பணியாளர்கள் மூலம் வாசலிலேயே வாடிக்கையாளர்களுக்கு விநியோகிக்கிறார்கள். இவற்றிற்கெல்லாம் பிரதானக் காரணம் மக்கள் நடமாட்டத்தின் மூலம் நோய் பரவாமல் இருக்கவும், கொரோனாவைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவும்தான்.

அத்தியாவசியப் பொருள்கள் அனைத்தும் அளவோடு விற்கப்படுகின்றன. பால், ரொட்டி, முட்டை, தண்ணீர், சோடா போன்றவைகள் ஒரு குடும்பத்துக்கு இவ்வளவுதான் என்ற நிலை. மீன், கோழி, ஆடு, மாடு, பன்றி இறைச்சிகள் முழுவதுமாகத் தீர்ந்துவிட்டன.

பொதுவாக வருட இறுதியில் வரும் `தேங்க்ஸ் கிவிங்’ என்று சொல்லப்படுகிற பண்டிகைக் காலங்களில் விற்கப்படும் வான் கோழி இறைச்சி இப்போதே விற்பனைக்கு வந்துவிட்டன. இறைச்சி இறக்குமதியும், இன்ன பிற அத்தியாவசியப் பொருள்களின் இறக்குமதியும் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்கா

உணவுப்பொருள்கள் விற்பனை அனைவருக்கும் பகிர்ந்தளிக்கப்படும் வகையில் கூடுதலாக வாங்கி, சேமித்து வைப்பது கட்டுப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. கழிவறைப் பொருள்கள், கிருமி நாசினிகள் போன்றவற்றைக் கடைகளில் பார்த்து பல நாள்களாகிவிட்டது. குழந்தைகளுக்கான உணவுப்பொருள்கள் குறைந்துகொண்டே வருகிறது. பள்ளி, கல்லூரிகள், அலுவலகங்கள் அனைத்தும் மூடப்பட்டு வீட்டிலிருந்தே இயங்கப் பணிக்கப்பட்டிருக்கின்றனர்.

சாலைகள் வெறிச்சோடிக் கிடக்கின்றன. ஆயிரமாயிரம் கார்கள் பறக்கும் அதிவேக சாலைகளில் ஐம்பதுக்கும் குறைந்த கார்களையே பார்க்க முடிகிறது. அனைவர் கண்களிலும் மரண பயம் தெரிகிறது. செல்லப் பிராணிகளை, வெளியில் அழைத்துச் சென்று காலாரக்கூட முடியாமல் கதிகலங்கிக் கிடக்கின்றனர்.

அமெரிக்கா

தவிர்க்க இயலாமல் கடைகளுக்குச் சென்றாலும் ஒவ்வொருவரும் குறைந்தபட்சம் ஆறு அல்லது ஏழு அடி இடைவெளியில் நிற்கக் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர். ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ளும் பரிதாபத்தை நினைக்கையில், அவர்கள் எண்ண ஓட்டத்தில் இப்படித்தான் சிந்தனை ஓடுமோ எனத் தோன்றுகிறது. அது “சாகப்போவது முதலில் நீயா அல்லது நானா” என்பதுதான்.

யாரைப் பார்த்தாலும் `இவருக்குக் கொரோனா இருக்குமோ?’ என்ற சந்தேகமே தோன்றுகிறது. இப்படியே போனால் இன்னும் எத்தனை நாள்கள் நாம் உயிரோடிருக்கப் போகிறோம் என்ற மரண பயம் ஒருபுறம்.

பெற்றோர்கள் தன் குழந்தைகளைப் பார்க்கும்போதெல்லாம், நமக்கு ஏதாவது ஆகிவிட்டால் நம் குழந்தைகளை யார் காப்பாற்றுவார் என்ற ஏக்கத்தை ஒவ்வொருவர் கண்களிலும் காண முடிகிறது. காரணம் நாளுக்குநாள் வேகமாய்ப் பரவி வரும் கொரோனாவுக்கு பலி ஆகி வரும் பயமூட்டும் எண்ணிக்கைகள்தான்..!

-நவின் சீதாராமன்

( டெனஸீ மாகாணம், அமெரிக்கா)

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.