மருத்துவர்கள் பரிந்துரைப்படி மது வழங்கலாம் என கேரள அரசு முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது.
கொரோனா பாதிப்பை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமே மளிகைக் கடைகள், காய்கறி கடைகள், கறிக் கடைகள் காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை தொடர்ந்து செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மற்றபடி வணிக வளாகங்கள், தியேட்டர்கள், பெரிய கடைகள், டாஸ்மாக் ஆகியவை மூடப்பட்டுள்ளன. பொதுமக்கள் அத்தியாவசிய காரணங்கள் இல்லாமல் வீடுகளை விட்டு வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைக்காக வெளியே வருபவர்களும் சமூக விலகலை கடைப்பிடிக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.
ஊரடங்கால் மதுபானக் கடைகள் மூடப்பட்டுள்ளதால் கேரளாவில் சிலர் தற்கொலை செய்துள்ளதாக கூறப்படுகிறது. கொரோனாவுக்கு ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் மதுவுக்கு அடிமையானவர்கள் மது கிடைக்காத விரக்தியால் 7 பேர் தற்கொலை செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுபோன்ற உயிரிழப்புகளை தடுக்க கேரள அரசு புதிய முடிவை எடுத்துள்ளது. அதாவது மதுவுக்கு அடிமையானவர்களுக்கு மருத்துவர்களின் பரிந்துரைப்படி மதுபானங்கள் வழங்கலாம் என கேரள அரசு முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது. மதுவை கைவிட்டதால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச சிகிச்சையை வழங்கவும் அவர்களை மறுவாழ்வு மையங்களில் சேர்க்கவும் கேரள அரசு கலால் துறையிடம் கேட்டுக்கொண்டுள்ளது.
“வருவாய் இன்றி தவிக்கிறோம்.. நேரத்தை அதிகப்படுத்துங்கள்” – ‘டெலிவரி பாய்ஸ்’ வேதனை
மதுபானம் திடீரென கிடைக்காமல் போவது, சமூகப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் என்பதால் ஆன்லைனில் மது விற்பனை செய்வது தொடர்பாக அரசு பரிசீலித்து வருவதாக பினராயி விஜயன் கூறியது குறிப்பிடத்தக்கது.