கொரோனா வைரஸ் சமூக பரவல் என்ற நான்காவது படிநிலையை எட்டிவிட்டதா என்பது குறித்து சுகாதாரத்துறை விளக்கம் அளித்துள்ளது.
கொரோனா வைரஸ் மொத்தம் நான்கு படிநிலைகளில் பரவுகிறது. வெளிநாட்டிலிருந்து வந்தவர்களுக்கு மட்டும் கொரோனா இருப்பது முதல்நிலை. இரண்டாவது நிலை என்பது வெளிநாட்டிலிருந்து வந்தவர்களுக்கு நெருக்கமாக உள்ளவர்களுக்குப் பரவுதல். மூன்றாவது நிலைதான் சமூக பரவல். அதாவது, கொரோனா தொற்று உள்ளவர்களுக்கு நெருக்கமானவர்கள் மூலமாகப் பலருக்கும் பரவி, யாரிடம் இருந்து பரவியது என்றே தெரியாத அளவிற்குச் சமுதாயத்தில் பலருக்கும் வந்தடையும் நிலைதான் அது. நான்காவது என்பது உச்சகட்டமானது.
“20 மணி நேரம்.. 450 கிலோ மீட்டர் நடைப்பயணம்..” சிலிர்க்க வைத்த காவலரின் கடமையுணர்ச்சி..!
இந்தியாவில் இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 29 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளதாக இதுவரை தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக அளவில் உயிரிழப்பு எண்ணிக்கை 36 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. தற்போதைய நிலையில் இந்தியா இரண்டாவது நிலையில்தான் உள்ளது எனக் கூறப்பட்டு வருகிறது. சமூக பரவல் நிலைக்குச் சென்றுவிட்டால் கட்டுப்படுத்துவது மிகவும் சிரமாக மாறிவிடும் என்பதைக் கருத்தில் கொண்டே ஊரடங்கு நாடு முழுவதும் அமலில் உள்ளது.
இந்நிலையில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் முக்கியமான தகவல் இடம்பெற்றுள்ளது. அதில், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட ஒருவருக்கு யார் மூலம் வந்தது என்பதைக் கண்டறிய முடியவில்லை என்றும் அதனால் லேசான சமூக பரவல் நாட்டில் தொடங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரிய அளவில் சமூக பரவல் எதுவும் நடைபெற்றதாகத் தகவல் இல்லை என்றும் இதில் மறைப்பதற்கு எதுவுமில்லை என்றும் ஏதேனும் தகவல் கிடைத்தால் உடனடியாக தெரியப்படுத்தப்படும் என்றும் சுகாதாரத்துறையின் கூடுதல் செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார்.
‘கொரோனா அச்சம் எங்களை வாட்டுகிறது’: கோவாவில் தவிக்கும் தமிழக மீன்பிடி தொழிலாளர்கள்
இருப்பினும், இந்தியாவில் சமூக பரவல் இன்னும் தொடங்கவில்லை என்றே தற்போது வரை மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு வருகிறது.