வீட்டுச் சிறையில் பூட்டி வைக்கப்பட்டுள்ள மக்களின் நிலைமையைப் பார்த்தால் இதயம் வெடிக்கிறது என்று பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி மார்ச் 24 ம் தேதி நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை அறிவித்தார். ஆகவே நாடு முழுவதும் அனைத்து போக்குவரத்து சேவைகளும் நிறுத்தப்பட்டன. இதனால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வாழ்வாதாரம் இல்லாமல் தவித்து வருகின்றனர். டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள தொழிலாளர்கள் அவர்களின் குழந்தைகளுடன் பெரும் நகரங்களிலிருந்து புலம்பெயர்ந்து, தங்களது சொந்த கிராமங்களை நோக்கி நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தூரத்தை நடந்தே பயணித்து வருகின்றனர்.
இந்த நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் தொழிலாளர்கள் உணவு மற்றும் வாடகை செலுத்தப் பணம் இல்லாததால் பெரு நகரங்களை விட்டு வெளியேறி வருவதாகக் கூறப்படுகிறது. இந்த நிலை நீடித்தால் தொற்று நோயின் சங்கிலித் தொடரை உடைப்பதற்காக அரசு மேற்கொண்டுள்ள முயற்சிக்குப் பலனே இல்லாமல் போய் விடும் என்று பல சுகாதார வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.
இந்நிலையில், தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் புலம்பெயர்ந்து செல்லும் ஏராளமான தொழிலாளர்கள் குறித்து ஒரு வீடியோவை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இது தொடர்பாக அவர் ட்விட்டர் பக்கத்தில் , “கொரோனா நோய்த் தொற்றிலிருந்து மக்களைக் காப்பாற்ற அரசாங்கம் மேற்கொண்ட முயற்சிகள் குறித்து விளக்கும் மற்றொரு பயங்கரமான படம் இது. கஷ்டங்களையும் சிக்கல்களையும் எதிர்கொண்டு நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து பீகாரை அடைந்த ஏழை மக்களுக்கு, சமூக விலகல் மற்றும் தனிமைப்படுத்தல் எனக் கூறி நிதீஷ் குமார் செய்துள்ள ஏற்பாடு இதயத்தை நொறுக்குகிறது ”என்று கூறியுள்ளார்.
மேலும் பீகாரில் நிறையப் பேரை ஒரு வீட்டுச் சிறையில் வைத்துப் பூட்டி வைத்துள்ளனர். அவர்களை விடுவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ள அவர், இல்லை என்றால் பீகார் முதல்வர் நிதீஷ் குமார் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். இதற்கு பிரசாந்த் கிஷோர் #NitishMustQuit என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தியுள்ளார்.
இதனுடன் அவர் இணைத்துள்ள 2: 17 நிமிடங்கள் ஓடும் வீடியோவில் மக்கள் கதறி கண்ணீர் வடிக்கின்றனர். அறைக்குள் வைத்து அவர்களைப் பூட்டியுள்ளனர். ஆகாரம் இன்றி அவர்கள் தவிப்பதாகச் சொல்லி அழுகின்றனர். வீட்டுச் சிறையில் பூட்டி வைக்கப்பட்டுள்ள ஒரு நபர், தலைநகர் பாட்னாவிலிருந்து 130 கி.மீ தூரத்தில் உள்ள சிவானில் உள்ள தனது வீட்டிற்குச் செல்ல விரும்புவதாகக் கூறுகிறார்.
அந்த நபர், “நான் அகமதாபாத்திலிருந்து வந்திருக்கிறேன். காலையிலிருந்து நாங்கள் உங்களை விடுவிப்போம் என்றும் ஒரு பஸ் வருகிறது என்றும் அவர்கள் எங்களிடம் கூறி வருகின்றனர். ஆனால் பஸ் இல்லை. அவர்கள் எங்களை விட மறுக்கிறார்கள் ”என்று வாயை மூடிக்கொண்டு அழுகிறார். இந்தக் காட்சி வீடியோவில் பதிவாகியுள்ளது.
.#Corona संक्रमण से लोगों को बचाने के सरकारी प्रयासों की एक और भयावह तस्वीर –
भारी तकलीफ़ और मुसीबतों को झेलकर देश के कई हिस्सों से बिहार पहुँचने वाले गरीब लोगों के लिए #NitishKumar की #SocialDistancing और #Quarantine की ये व्यवस्था दिल दहलाने वाली है।#NitishMustQuit pic.twitter.com/ot3hygGRk7
— Prashant Kishor (@PrashantKishor) March 29, 2020