இந்தியா முழுவதும் ஊரடங்கு அமலில் இருந்தாலும் காய்கறி, மளிகை போன்ற அத்தியாவசியப் பொருட்களுக்கு தடை இல்லை என்றும், பொதுமக்கள் சமூக விலகலுடன் கடைகளுக்கு சென்று வரலாம் என்றும் கூறப்பட்டது. அதன்படி பல இடங்களில் காய்கறி கடைகள் மற்றும் மளிகை பொருட்கள் வாங்கும் இடங்களில் இந்த சமூக இடைவெளி பின்பற்றப்பட்டு வந்தாலும் நாள் முழுவதும் மக்கள் நடமாட்டம் இருந்தே வந்தது.
கொரோனா நோய்த்தொற்றின் தீவிரத்தைப் புரிந்து கொள்ளாமல் தேவையின்றி சாலைகளில் நடமாடுவதைத் தடுக்க நேரக்கட்டுப்பாடு நடவடிக்கையை தமிழக அரசு இன்று முதல் செயல்படுத்தியுள்ளது. அதன்படி, கோயம்பேடு போன்ற மொத்த காய்கறி பழ அங்காடிகளுக்கு வரும் வாகனங்கள், மாலை 6 மணி முதல் அதிகாலை 6 மணிக்குள் பொருள்களை இறக்கி விட வேண்டும். கோயம்பேடு காய்கறி அங்காடி மற்றும் பிற காய்கறி விற்பனை கடைகள், மளிகைக் கடைகள், பெட்ரோல் பங்க்குகள் ஆகியவை காலை 6 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை திறந்திருக்க வேண்டும்.
மருந்தகங்களும் பார்சல்கள் மூலம் விற்பனை செய்து வரும் உணவகங்களும் எப்போதும்போல நாள் முழுவதும் இயங்கும் என கூறப்பட்டுள்ளது. மக்கள் கூட்டம்கூடுவதை தவிர்க்க அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனால் இதனை மக்கள் எந்த அளவுக்கு கடைபிடிக்கிறார்கள் என்பது கேள்விக்குறியாக உள்ளது.
விழுப்புரம் மீன் மார்க்கெட்டில் இன்று அதிகாலை முதலே பொதுமக்கள் ஏராளமானோர் மீன் வாங்குவதற்கு குவிந்தனர். மார்கெட் பகுதியில் சமூக இடைவெளி பின்பற்றப்படாமல் பொது மக்கள் கூட்டமாக குவிந்து மீன்களை வாங்கிச்சென்றனர். கொரோனா நோய் பரவும் அச்சுறுத்தல் இருந்தும் எதையும் பொருட்படுத்தாமல் பொதுமக்கள் கூட்டமாக வந்து போவதாக அப்பகுதிவாசிகள் சிலர் குற்றம் சுமத்துகின்றனர். இது குறித்து அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
கொரோனா வைரஸ் பாதிப்பு – காய்கறி பொருட்களை எப்படி கையாளம் வேண்டும் மருத்துவர் விளக்கம்