டோக்கியோ ஒலிம்பிக் ஒத்திவைக்கப்பட்டாலும், இதுவரை தகுதிபெற்ற வீரர்கள் அடுத்தாண்டு நடைபெறும் தொடரில் பங்கேற்கலாம் என முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று காரணமாக டோக்கியோ ஒலிம்பிக் தொடர் ஓராண்டு தள்ளி வைக்கப்பட்டது. இந்த முடிவு, கடைசியாகக் கலந்து கொண்டு ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல வேண்டும் என்ற ஆவலுடன் இருந்த வீரர்களுக்குப் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் டோக்கியோ ஒலிம்பிக் ஒத்திவைக்கப்பட்டாலும், இதுவரை தகுதிபெற்ற வீரர்கள் அடுத்தாண்டு நடைபெறும் தொடரில் பங்கேற்கலாம் என முடிவு எடுக்கப்பட்டுள்ளது இப்போது தெரியவந்துள்ளது. இது தொடர்பாகச் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அளித்த பரிந்துரையை அனைத்து விளையாட்டு சங்கங்களும் ஏற்றுக் கொண்டதாக உலக தடகள அமைப்பின் தலைவர் செப் கோ தெரிவித்துள்ளார்.
டோக்கியோ ஒலிம்பிக்கில் கலந்துகொள்ள 57 சதவிகித அதாவது 6,200 வீரர்கள் இதுவரை தகுதி பெற்றுள்ளனர். முன்னதாக, அடுத்தாண்டு ஒலிம்பிக் தொடர் எப்போது நடத்தப்படும் என்பது குறித்து நான்கு வாரங்களுக்குள் முடிவு எடுக்கப்படும் என சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர் தாமஸ் பாஹ் தெரிவித்திருந்தார்.
கொரோனா வைரஸ் பரவல் முன்னெச்சரிக்கையாக, வரும் ஜூலையில் நடத்தத் திட்டமிடப்பட்ட டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் ஓராண்டுக்குத் தள்ளி வைக்கப்பட்டன. இதனிடையேதான் இதுவரை தகுதி பெற்ற வீரர்கள் அடுத்தாண்டு ஒலிம்பிக்கில் பங்கேற்பார்கள் என உலக தடகள அமைப்பின் தலைவர் தகவல் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.