TVK: “விஜய் வெறுப்பு அரசியலையே உயர்த்திப்பிடிக்கிறார்” – வேலூரில் திருமாவளவன்

வேலூர் வி.ஐ.டி-யில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, “ஆளுநர் மாளிகைக்கு இதுவரை ராஜ்பவன் என்று இருந்த பெயரை இப்போது `லோக் பவன்’, அதாவது ‘மக்கள் மாளிகை’ என மாற்றம் செய்திருப்பதை வரவேற்கிறோம்.

விஜய் கட்சியைப் பார்த்து யாருக்கும், எந்தக் கட்சிக்கும் பயமில்லை. முதன்முதலில் விஜய் அரசியல் கட்சி தொடங்கியபோது அவரை வரவேற்ற கட்சி வி.சி.க.தான். விஜய் கட்சி தொடங்கி 2.5 ஆண்டுகள் ஆகிறது. பல்வேறு நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார்.

தொல்.திருமாவளவன்
தொல்.திருமாவளவன்

ஆனால், அவர் கொள்கை சார்ந்த அரசியலாக எதையும் பேசாமல், வெறுப்பு அரசியலையே உயர்த்திப் பிடிக்கிறார். உடனடியாக ஆட்சிக்கு வந்துவிட வேண்டும் என்ற வேட்கையுடன், ஆளும் கட்சியை விமர்சிப்பது என்பதைத் தாண்டி, வெறுப்பை உமிழ்ந்துகொண்டிருக்கிறார். அதனால்தான் ஜனநாயக சக்திகள் பலரும் அவருக்கு அறிவுரை – வழிகாட்டும் வகையில் கருத்துக் கூறிவருகிறார்கள்.

இதுவரை விசிக தனிநபர் விமர்சனத்தை செய்ததில்லை. அந்தக் கட்சியைக் கடுமையாக நாங்கள் விமர்சித்ததும் இல்லை. ஆனால், அவர்கள் முன்வைக்கும் அரசியலில் எங்களுக்கு விமர்சனம் இருக்கிறது. அதைத்தான் நாங்கள் சுட்டிக்காட்டியிருக்கிறோம்.” எனத் தெரிவித்திருக்கிறார்.