அடுத்த ஆண்டு சீனா செல்லும் ட்ரம்ப்; தைவானை கேட்கும் சீனா – என்ன நடக்கிறது?

வரி… பிரச்னை… சமாதானம்… ரிப்பீட்டு – இப்படி தான் அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்றதில் இருந்து அமெரிக்கா – சீனா உறவு இருந்து வருகிறது.

கடந்த ஏப்ரல் மாதம், சீனா மீது அதிக வரிகளை விதித்தார் ட்ரம்ப். அதன் பிறகு சமாதானம் ஆகி, அமெரிக்கா, சீனா இடையே வர்த்தக பேச்சுவார்த்தை நடத்தி வந்தது… அது வெற்றிகரமாக நடந்து வருவதாகவே தகவல்கள் பரவின… இரு நாடுகளும் அதை தான் சொன்னது.

ட்ரம்ப்
ட்ரம்ப்

அடுத்த பிரச்னை

அந்த நேரத்தில்தான், சீனா தங்கள் நாட்டிலிருந்து ஏற்றுமதி செய்யும் அரிய கனிமங்களுக்கு கட்டுப்பாடுகளை விதித்தது. இதனால், கோபமுற்ற ட்ரம்ப், சீனா மீது 100 சதவிகித வரி விதிக்க இருப்பதாக எச்சரித்தார்.

அதன் பின், அதே மாத கடைசியில், ட்ரம்ப், சீன அதிபர் ஜின்பிங் சந்தித்துக்கொண்டனர். அந்தச் சந்திப்பில் பெரிதாக எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்றாலும், அது முக்கியமாகப் பார்க்கப்பட்டது.

இந்தச் சந்திப்புக்குப் பிறகு, இரு நாடுகளுக்கு இடையே பேச்சுவார்த்தை நல்லபடியாக நடந்து வருகிறது. ஆக, இப்போது அமெரிக்கா, சீனா உறவு சமாதான படலத்தில் உள்ளது.

தொலைபேசி அழைப்பு

இந்த நிலையில்தான், நேற்று ட்ரம்ப் – ஜின்பிங் தொலைபேசியில் பேசியிருக்கின்றனர்.

இதுகுறித்து ட்ரம்ப் தனது ட்ரூத் பக்கத்தில், “நானும் ஜியும் உக்ரைன் விஷயம், ஃபென்டனைல், சோயா பீன்ஸ் உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து ஆலோசித்தோம்.

சீனா உடனான நம்முடைய உறவு மிகவும் வலுவாக உள்ளது.

என்னை அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் பீஜிங்கிற்கு அதிபர் ஜி அழைத்தார். நான் அந்த அழைப்பை ஏற்றுக்கொண்டேன். அவரும் அடுத்த ஆண்டு இறுதியில் அமெரிக்கா வருவதாக ஒப்புக்கொண்டார்” என்று பதிவிட்டுள்ளார்.

ட்ரம்ப் - ஜி ஜின்பிங்
ட்ரம்ப் – ஜி ஜின்பிங்

இந்தத் தொலைபேசி அழைப்பு குறித்து வெளியுறவுத் துறையின் சீன செய்தி தொடர்பாளர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் ஜி ஜின்பிங் தைவானை சீனா உடன் இணைப்பது குறித்து பேசியதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த உறவு அப்படியே தொடருமா… அல்லது அடுத்து எதாவது பிரச்னை ஏற்பட்டு விரிசல் உண்டாகுமா… காலம் தான் பதிலளிக்கும்.