ஜம்மு-காஷ்மீர் காவல்துறையின் மாநில புலனாய்வு நிறுவனம் (SIA) புதன்கிழமையன்று ஜம்முவில் உள்ள காஷ்மீர் டைம்ஸ் பத்திரிகையின் அலுவலகத்தை சோதனை செய்தது.
காஷ்மீர் டைம்ஸ் நாட்டுக்கு எதிரான நடவடிக்கைகளை ஊக்குவிப்பதாக ஏழுந்த குற்றச்சாட்டுகள் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்றுள்ளது.
அங்கே ஏ.கே ரக துப்பாக்கிகள், வெவ்வேறு வகை வெடிமருந்துகள், பிஸ்டல் ரவுண்ட்கள் மற்றும் கையெறி குண்டு பாகங்கள் உள்ளிட்ட பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
பத்திரிகையின் அலுவலகத்திலும் கனிணிகளிலும் சோதனை நடத்தியிருக்கின்றனர். விசாரணையின் அடுத்தகட்டமாக செய்தித்தாளுடன் தொடர்புடைய நபர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்படுவார்கள் எனக் கூறப்படுகிறது.
இந்த நடவடிகைக் குறித்து காஷ்மீர் துணை முதல்வர் சுரிந்தர் சிங் சவுத்ரி, “அவர்கள் எதாவது தவறு செய்திருந்தால் மட்டுமே நீங்கள் நடவடிக்கை எடுக்க முடியும். வெறுமனே அழுத்தம் கொடுப்பதற்காக மட்டுமே நடந்திருந்தால், இது மிகவும் தவறான ஒன்று” எனப் பேசியுள்ளார்.
Kashmir Times
1954ம் ஆண்டு வேத் பாசின் என்ற பத்திரிகையாளரால் உருவாக்கப்பட்ட இந்த செய்தித்தாள் பிரிவினைவாத ஆதரவு பத்திரிகையாக கருதப்படுகிறது. காஷ்மீர் பத்திரிகையாளர் மன்றத்தின் தலைவராகச் செயல்பட்ட வேத் பாசின் மறைவுக்குப் பிறகு அவரது மகள் அனுராதா பாசின் ஜம்வால் மற்றும் பிரபோத் ஜாம்வால் பத்திரிகையை நடத்தி வருகின்றனர்.
பத்திரிகை சுதந்திரத்தின் மீது தாக்குதல்
அனுராதா மற்றும் பிரபோத் ஆகியோர் நடைபெற்ற இந்தச் சோதனை, “சுயாதீன பத்திரிகையை மௌனமாக்குவதற்கான ஒருங்கிணைந்த முயற்சி” எனக் கருதுகின்றனர். மேலும், “அரசாங்கத்தை விமர்சிப்பது அரசுக்கு விரோதமாக இருப்பதாக பொருள் அல்ல. ஆரோக்கியமான ஜனநாயகத்திற்கு ஒரு வலுவான, கேள்வி கேட்கும் பத்திரிகை அவசியம். எங்களுக்கு எதிராக சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் மிரட்டுவதற்கும், சட்டப் பூர்வ அங்கீகாரத்தைப் பறிப்பதற்கும், இறுதியில் அமைதியாக்குவதற்கும் வடிவமைக்கப்பட்டுள்ளன. நாங்கள் அமைதியாக இருக்க மாட்டோம்.” எனக் கூறியுள்ளனர்.
அத்துடன் பத்திரிகை நடத்துவது குற்றமல்ல என்றும் என்ன சோதனை நடந்தாலும் உண்மைகளை வெளிக்கொணருவதற்கான அர்ப்பணிப்பு தொடரும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
