“போடி எம்எல்ஏ அலுவலகம் 15 ஆண்டுகளாக செயல்படாமல் இருக்கிறது” – பிரேமலதா விஜயகாந்த்

’உள்ளம் தேடி இல்லம் நாடி’ பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக இரண்டு நாள் பயணமாக தேனி மாவட்டத்திற்கு வருகை தந்திருந்தார் தேமுதிக பொதுசெயலாளர் பிரேமலதா விஜயகாந்த. ஆண்டிபட்டியில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய போது,

“தேமுதிக சந்தித்த முதல் தேர்தலில் 8.33 சதவீதமும், தொடர்ந்து வந்த பாரளுமன்ற தேர்தலில் 10.38 சதவீதம் பெற்று சாதனை படைத்த கட்சி. பல வெற்றி, தோல்விகள் பார்த்த கட்சி.

எந்த கட்சியிடமும் பணம் கொடுங்கள் என்று நின்ற கட்சியல்ல தேமுதிக. இங்கே கூடியிருக்கும் கூட்டம் கேப்டன் என்ற சொல்லுக்காக வந்த கூட்டம்.

நாங்கள் யாரையும் பணம் கொடுத்து அழைக்கவில்லை. எப்போதும் தான் உழைத்து சம்பாதித்த பணத்தை கொடுத்தவர் விஜயகாந்த். இன்றைக்கு எல்லோரும் விஜயகாந்தின் நினைவிடத்திற்கு வருகிறார்கள்.

பிரேமலதா விஜயகாந்த்
பிரேமலதா விஜயகாந்த்

தேமுதிக யாருடன் கூட்டணி அமைக்குமோ அவர்கள் தான் ஆட்சியமைப்பார்கள். தமிழ்நாட்டில் முதல்முறையாக கூட்டணி ஆட்சி அமையும் என்று கருத்து கணிப்புகள் சொல்கின்றன.

ஜனவரி 9 ஆம் தேதி கடலூரில் நடக்கும் மாநாட்டிற்கு எல்லோரும் வரவேண்டும். 2026 சட்டமன்ற தேர்தலில் தேமுதிகவின் நிலைப்பாடு என்ன என்பதை கடலூரில் நடைபெறும் தேமுதிக மாநாட்டில் தெரிவிப்போம்.

வெற்றிலைக்கு சரியான விலை கிடைக்கவில்லை. அதற்கு விலை நிர்ணயம் செய்ய வேண்டும். மீனாட்சிபுரம் கால்வாயை சுத்தம் செய்து பொழுது போக்கு பூங்காவாக மாற்ற வேண்டும்.

குரங்கணியில் தொலை தொடர்பு சேவை இல்லாமல் மக்கள் சிரமப்படுகிறார்கள். குரங்கணி மலைப்பகுதியை சுற்றுலாத்தளமாக மாற்றினால் இங்குள்ள மக்கள் பலனடைவார்கள்.

பிரேமலதா விஜயகாந்த்
பிரேமலதா விஜயகாந்த்

போடி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் 15 வருடங்களாக செயல்படாமல் இருக்கிறது, தேமுதிக கூட்டணி வேட்பாளர் வெற்றி பெற்று வரும் போது அலுவலகத்தை முழுமையாக திறந்து வைப்போம், 2026-ல் நாங்கள் வந்தால் இவற்றையெல்லாம் பேச மாட்டோம் செய்து காட்டுவோம்” என்றார்.