“அம்மா மறைவுக்குபின் எடப்பாடியார் கிடைத்திருக்கவிட்டால்!’ – டிடிவி தினகரனை சாடும் ஆர்.பி. உதயகுமார்

அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயக்குமார் இன்று (நவ.11) மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார்.

அதில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் டிடிவி தினகரனை விமர்சித்து பேசியிருக்கிறார்.

“உங்களுக்கு தம்பியாக இருந்து சொல்கிறேன். உங்கள் டைட்டிலை மாற்றுங்கள். உங்களுடைய டயலாக்கை மாற்றுங்கள்.

உங்கள் படம் அப்போதாவது தமிழகத்தில் எடுப்படுகிறதா? என்று பார்ப்போம்.

TTV Dinakaran
TTV Dinakaran

அரைத்த மாவையே அரைத்துக்கொண்டிருக்காதீர்கள். அதைப் பார்ப்பதற்கும் கேட்பதற்கும் யாரும் தயாராக இல்லை.

அதிமுக கூட்டணி குறித்து நீங்கள் ஏன் நீலிக்கண்ணீர் வடிக்கிறீர்கள். கொடநாடு வழக்கில் எடப்பாடியார் சட்டப்படி நடவடிக்கை எடுத்ததை இந்த நாடு அறியும்.

கொடநாடு வழக்கை பேசி இன்னும் எத்தனை நாட்களுக்குதான் பூச்சாண்டி காட்டுவீர்கள்.

மீண்டும் மீண்டும் பச்சைப் பொய் சொல்கிறார் டிடிவி தினகரன். அதனை யாரும் நம்பப்போவதில்லை.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

அதிமுகவிற்கு கிடைத்த பொக்கிஷம் புரட்சி தமிழர் எடப்பாடியார். அம்மாவின் மறைவுக்கு பின் அவர் கிடைத்திருக்கவிட்டால் அதிமுக தொண்டர்கள் சுதந்திர காற்றை சுவாசித்திருக்க மாட்டார்கள்” என ஆர்.பி உதயக்குமார் பேசியிருக்கிறார்.