9 துறைமுகங்களை புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம்!

வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையில், “தென்கிழக்கு வங்கக் கடலில் நேற்று உருவான காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி இன்று காலை 5:30 மணியளவில் அதே பகுதியில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறியிருக்கிறது.
இது மேற்கு – வடமேற்கு நோக்கி நகர்ந்து 26-ம் தேதிக்குள் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, 27-ம் தேதி காலை வங்கக் கடலின் தென்மேற்கு மற்றும் அதை ஒட்டிய மேற்கு மத்தியப் பகுதியில் ஒரு புயலாக மாறும்.
அதற்கடுத்த 48 மணிநேரங்களில் வடமேற்காக ஆந்திரப் பிரதேச கடற்கரையை நோக்கி நகர வாய்ப்புள்ளது” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
சென்னை, கடலூர், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி, ராமேஸ்வரம், குளச்சல் ஆகிய 9 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது
தமிழ்நாட்டில் அக்டோபர் 16-ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதல் பல மாவட்டங்களில் தொடர்ச்சியாக மிதமானது முதல் கனமழை பெய்து வருகிறது.
தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டிய தெற்கு அந்தமான் கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நேற்று காலை 5.30 மணிக்கு தென்கிழக்கு வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவானது. இது, மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக் கடல் பகுதிகளில் அக்டோபர் 25, 26 தேதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக பெறக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் நேற்று அறிவித்திருந்தது.
குறிப்பாக, இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது அக்டோபர் 27-ம் தேதி காலையில் தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் புயலாகவும் வலுவடையக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த புயலானது ஆந்திரா நோக்கி சென்றாலும் சென்னையில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
மேலும், அக்டோபர் 25 முதல் 27 வரையில் 3 நாள்களுக்கான கனமழை எச்சரிக்கையைப் பொறுத்தவரையில், இன்று விழுப்புரம், கடலூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்கள் மற்றும் புதுவையிலும், நாளை விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்கள் மற்றும் புதுவையிலும், நாளை மறுநாள் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்யக்கூடும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில், இன்று காலை வெளியான வானிலை அறிக்கையின்படி காலை 10 மணி வரைக்குமான கணிப்பின்படி, திருவள்ளூர், செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
மழை குறித்த அடுத்தடுத்த வானிலை அறிவிப்புகள் தொடர்ந்து அப்டேட் செய்யப்படும்.!
