பாகிஸ்தான்: “70 ஆண்டுகள் மறுக்கப்பட்ட உரிமைகள்” – அரசுக்கு எதிராக கொதித்தெழுந்த PoK மக்கள்

1ஜம்முவில் உள்ள பாகிஸ்தான் அக்கிரமிப்பு காஷ்மீர் (PoK) பகுதிகளில் பாகிஸ்தான் அரசுக்கு எதிராக போராட்டம் வெடித்துள்ளது. கடந்த மூன்று நாட்களில் பல இடங்களில் வன்முறை ஏற்பட்டதாக செய்திதளங்கள் கூறுகின்றன. இதில் பாக் (Bagh) மாவட்டத்தில் 4 பேர், முசாபராபாத்தில் 4 பேர், மிர்பூரில் இரண்டு பேர் என 10 பேர் கொல்லப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் வாழும் மக்களுக்கு அடிப்படை உரிமைகள் மற்றுக்கப்படுவதாக கூட்டு அவாமி நடவடிக்கைக் குழு (joint Awami Action Committee) தலைமையில் 3 நாட்களுக்கும் மேலாக போராட்டம் நடைபெற்று வருகிறது. சந்தைகள், கடைகள் மற்றும் உள்ளூர் வணிகங்கள், போக்குவரத்து சேவைகள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளன.

சில இடங்களில் போராட்டக்காரர்களின் பேரணியில் வன்முறை ஏற்பட்டிருக்கிறது. முசாபராபாத்தில் போராட்டக்காரர்கள் அணிவகுப்பை தடுக்க ஆற்றுப்பாலங்களில் வைக்கப்பட்டிருந்த கப்பல் கண்டெய்னர்களை ஆற்றில் கவிழ்த்துள்ளனர். இணையத்தில் பல வீடியோக்கள் பரவி வருகின்றன.

போராட்டக்காரர்களைக் கட்டுப்படுத்த பாகிஸ்தான் ராணுவம், பாதுகாப்பு படைகள் ஷெல் தாக்குதல், துப்பாக்கிச் சூடு நடத்தியதாக JAAC தெரிவிக்கிறது.

போராட்டத்தை நடத்தும் குழுவினர் 38 கோரிக்கைகளை வைத்துள்ளனர். அதில், பாகிஸ்தானில் வசிக்கும் காஷ்மீர் அகதிகளுக்கு PoK சட்டமன்றத்தில் ஒதுக்கப்பட்ட 12 சீட்டுகளை ஒழிப்பது முக்கியமான ஒன்றாகும்.

இத்துடன் மானிய விலையில் மாவு, மங்களா நீர்மின் திட்டத்துடன் இணைக்கப்பட்ட நியாயமான மின்சார கட்டணங்கள் மற்றும் அரசு வாக்குறுதியளித்த நீண்டகாலமாக தாமதிக்கப்பட்டு வரும் சீர்திருத்தங்களை செயல்படுத்துதல் போன்றவை அடங்கும்.

“70 ஆண்டுகளுக்கும் மேலாக எங்கள் மக்களுக்கு மறுக்கப்பட்ட அடிப்படை உரிமைகளுக்காகவே இந்த பிரசாரம்… உரிமைகளை வழங்க வேண்டும் அல்லது மக்களின் கோபத்தை எதிர்கொள்ள வேண்டும்” என்று JAAC தலைவர் ஷௌகத் நவாஸ் மிர் கூறியுள்ளார்.

இந்த போராட்டத்தில் பாதுகாப்பு படையினருடனான மோதலில் 10 குடிமக்கள் இறந்ததுடன் 2 காவலர்களும் மரணமடைந்துள்ளனர். காவலர்களின் குடும்பங்களுக்கு கொடுக்கப்படும் அதே இழப்பீடு உயிரிழந்தவர் குடும்பங்களுக்கும் கொடுக்கப்படும் என JAAC தலைவர் ஷௌகத் நவாஸ் மிர் கோரியுள்ளார். அத்துடன் அவர்கள் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் கொடுக்கப்பட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளனர்.

நடைபெற்று வரும் போராட்டங்கள் பிளான் A தான் என்றும் அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், பிளான் D வரை செயல்படுத்தப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது JAAC.