`சின்ன பையன்… நேற்று முளைத்தவன் எல்லாம் பேசுகிறான்’- விஜய்யை கடுமையாக தாக்கி பேசிய ஆர்.எஸ்.பாரதி

பரந்தூரில் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தவெக தலைவர் விஜய் ஜனவரி 20 ஆம் தேதி போராட்டத்தை நடத்தி இருந்தார்.

போராட்டத்தின் போது, “உங்கள் நாடகத்தை பார்த்து மக்கள் சும்மா இருக்க மாட்டார்கள். மக்கள் நம்பும்படி நாடகம் ஆடுவதுதான் உங்களுக்கு கைவந்த கலையாச்சே. இந்த விமான நிலையத்துக்கான இடத்தை மறு ஆய்வு செய்ய வேண்டும். எதிர்க்கட்சியாக இருக்கும் போது ஒரு நிலைப்பாடு, ஆளுங்கட்சியாக ஒரு நிலைப்பாடா?” என்று தி.மு.கவை விமர்சித்து பேசியிருந்தார். இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி விஜய்யை கடுமையாகத் தாக்கி பேசியிருக்கிறார்.

தவெக விஜய் - பரந்தூர்
தவெக விஜய் – பரந்தூர்

”எல்லாம் ஏதேதோ பேசுகிறார்கள். நேற்று முளைத்தவன் எல்லாம் பேசுகிறான். அவங்க அப்பனையே நாங்க தான் அறிமுகப்படுத்தினோம். அவன் எல்லாம் இப்பொழுது நமக்கு சவால் விடுகிறான். ஒன்றை மட்டும் சொல்கிறேன், திமுகவை எதிர்த்தவன் எவனும் வாழ்ந்ததாகவும் இல்லை நிலைத்ததாகவும் இல்லை. பழைய வரலாறுகள் நிறைய இருக்கிறது… அதற்குள்ளே போகக்கூடாது.

பேசுவதற்கு ஒரு யோக்கியதை வேண்டும். நேற்று அந்த சின்ன பையன் பேசுகிறான் நாடகமாடுவதில் நாங்கள் எல்லாம் கைதேந்தவர்களாம். நீ யார்ரா? உங்க அப்பன் யாரு? உங்க அம்மா யாரு? என கேட்டால் பதில் சொல்ல முடியுமா? ஆக நடிப்பது மட்டுமல்ல நடிப்பதற்கு வசனம் எழுதிக் கொடுத்து நாட்டுக்கு அடையாளம் காட்டப்பட்டவர் தான் நீங்கள் எல்லாம் என்பதை மறந்து விடக் கூடாது.

ஆர்.எஸ்.பாரதி
ஆர்.எஸ்.பாரதி

உங்க அப்பா யாரு எங்க தலைவர் எழுதிய வசனத்தை டைரக்ஷன் பண்ண ஆளு. நீ பிறப்பதற்கு முன்னாடியே அந்த காலத்தில் தமிழ்நாட்டில் ஆண்கள் மட்டும்தான் போலீஸில் இருப்பார்கள். பெண்களுக்கு போலீஸில் இடம் கிடையாது. முதன் முதலில் காவல்துறையில் பெண்களுக்கு பணியை ஏற்படுத்திக் கொடுத்தவர் கலைஞர்” என்று விஜய்யை கடுமையாகத் தாக்கி பேசியிருக்கிறார்.