பாலஸ்தீனம், லெபனான், இரான்… தற்போது ஏமன் என இஸ்ரேலின் பகை மற்றும் தாக்குதல் பட்டியல் நீண்டுக்கொண்டே போகிறது.
இஸ்ரேலை லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பு எப்படி எதிர்க்கிறதோ, அதுபோல ஏமனைச் சேர்ந்த ஹூதி அமைப்பும் எதிர்த்து வருகிறது. இதனால் அவ்வப்போது ஏமனின் மீது தாக்குதல் நடத்தி வந்த இஸ்ரேல், நேற்று ஹூதிகள் தலைமையில் ஏமனில் இருக்கும் சில இடங்களில் வான்வழி வெடிகுண்டு தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலுக்கு உள்ளான இடங்களில் ஏமனில் உள்ள சனா சர்வதேச விமான நிலையமும் அடங்கும்.
அந்தத் தாக்குதலில் மயிரிழையில் உயிர் தப்பித்திருக்கிறார் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ். டெட்ரோஸ் தனது ஐ.நா சபை மற்றும் உலக சுகாதார அமைப்பின் சகாக்களோடு ஏமனில் இருந்து கிளம்ப சனா விமான நிலையத்திற்கு சென்றபோது தான் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.
Our mission to negotiate the release of @UN staff detainees and to assess the health and humanitarian situation in #Yemen concluded today. We continue to call for the detainees’ immediate release.
As we were about to board our flight from Sana’a, about two hours ago, the airport… pic.twitter.com/riZayWHkvf
— Tedros Adhanom Ghebreyesus (@DrTedros) December 26, 2024
இந்தத் தாக்குதல் குறித்து டெட்ரோஸ் தனது எக்ஸ் பக்கத்தில் நேற்று குறிப்பிட்டுள்ளதாவது, “ஏமனில் சிறை பிடிக்கப்பட்டுள்ள ஐ.நா சபை அதிகாரிகளின் விடுதலை மற்றும் ஏமனின் சுகாதாரம் மற்றும் மனிதநேயம் சம்பந்தமான பேச்சுவார்த்தை இன்று முடிவுற்றது. ஐ.நா சபை அதிகாரிகளை உடனடியாக விடுதலை செய்யுமாறு இப்போது கூறி வருகிறோம்.
நாங்கள் சனா விமான நிலையத்தில் விமான ஏறுவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பு, விமான நிலையம் வான்வழி வெடிகுண்டு தாக்குதலுக்கு உள்ளாகியது. இதில் எங்களுடைய விமானி குழுவில் ஒருவர் காயமடைந்தார். மேலும், அந்த விமான நிலையத்தில் இந்த தாக்குதலால் குறைந்தபட்சம் இரண்டு பேராவது உயிரிழந்திருப்பார்கள். நாங்கள் இருந்த இடத்தில் இருந்து சில மீட்டர்கள் தள்ளி இருந்த ஏர் டிராபிக் கன்ட்ரோல் டவர், புறப்படும் லாஞ்ச், ரன்வே உள்ளிட்ட பல இடங்கள் தாக்குதலால் சேதம் அடைந்தது.
அந்த சேதங்கள் சரி செய்யப்படும் வரை நாங்கள் காத்திருக்க வேண்டியதாக இருந்தது.
நானும், எனது ஐ.நா மற்றும் உலக சுகாதார அமைப்பு சகாக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கிறோம்.
இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எங்களது ஆழ்ந்த இரங்கல்கள்” என்று பதிவிட்டுள்ளார்.