“தமிழக எல்லை மருத்துவக் கழிவுகளை கொட்டும் குப்பைக் கிடங்கா..?” – டிடிவி தினகரன் காட்டம்

தமிழகத்தின் எல்லையோர மாவட்டங்களில் கேரள மாநிலத்தின் மருத்துவக் கழிவுகள் கொட்டப்படுவதாகத் தொடர்ந்து குற்றச்சாட்டப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக அமுமுக-வின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தன் எக்ஸ் பக்கத்தில், “கேரள மாநிலத்தின் எல்லையோர மாவட்டங்களான திருநெல்வேலி மற்றும் தென்காசியின் பல்வேறு பகுதிகளில் அம்மாநிலத்தின் ஏராளமான இறைச்சி மற்றும் மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன.

மருத்துவக் கழிவுகள் ( Representational Image)

தமிழகத்தை குப்பைக் கிடங்காக பயன்படுத்தி மருத்துவ மற்றும் இறைச்சிக் கழிவுகளை எல்லையோர மாவட்டங்களின் நீர்நிலைகளுக்கு அருகே கொட்டிவரும் கேரள அரசால், அந்த நீரைப் பயன்படுத்தும் பொதுமக்களுக்கு பல்வேறு உடல் உபாதைகளும், பக்க விளைவுகளும் ஏற்படுவதோடு இயற்கை வளங்களும் கடுமையாக பாதிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

தமிழகத்தின் எல்லையோர மாவட்டங்களில் விதிகளுக்கு மாறாக மருத்துவக் கழிவுகளைக் கொட்டுவோர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க பரிசீலனை செய்து வருவதாக, கடந்த ஆண்டு கூறிய தி.மு.க அரசு அது தொடர்பாக எந்தவித நடவடிக்கையும் எடுக்காததே மருத்துவக் கழிவுகள் கொட்டப்படுவது தொடர்கதையாகி வருவதற்கு காரணம் என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

டிடிவி தினகரன்

எனவே, சுற்றுச்சூழலுக்கும், பொதுமக்களின் சுகாதாரத்திற்கும் கேடு விளைவிக்கும் வகையில் விதிகளுக்கு மாறாக மருத்துவக் கழிவுகளை கொட்டும் குப்பைக் கிடங்காக பயன்படுத்திவரும் கேரள அரசுக்கு கடும் கண்டனத்தை தெரிவிப்பதோடு, இனிவரும் காலங்களில் சோதனைச் சாவடிகளில் சோதனையை தீவிரப்படுத்தி இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலினை வலியுறுத்துகிறேன்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.