இலங்கை அதிபர் தேர்தலில் வெற்றிப் பெற்றப் பிறகு, அனுரகுமார திஸாநாயக்க முதல் அரசு முறைப்பயணமாக இந்தியா வந்திருக்கிறார். டெல்லி விமான நிலையத்தில் வந்திறங்கிய அவரை, மத்திய அமைச்சர் எல்.முருகன் வரவேற்றார். அதைத் தொடர்ந்து, இலங்கை அதிபர் இந்தியாவின் முக்கிய அமைச்சர்களையும், அதிகாரிகளையும் சந்தித்துப் பேசியுள்ளார். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், தேசியப் பாதுகாப்புத்துறை ஆலோசகர் அஜித் தோவால் ஆகியோரை சந்தித்திருக்கிறார்.
During my official visit to India, I had the privilege of engaging in productive discussions with Finance Minister @nsitharaman, External Affairs Minister @DrSJaishankar, and National Security Advisor Shri Ajit Doval. Our conversations focused on strengthening Indo-Sri Lanka… pic.twitter.com/A5mkZ4TS1D
— Anura Kumara Dissanayake (@anuradisanayake) December 15, 2024
இந்த சந்திப்பில், இந்தியா – இலங்கை பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்துதல், முதலீட்டு வாய்ப்புகளை அதிகரித்தல் போன்ற விவகாரங்களில் கலந்துரையாடல் நடந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், சுற்றுலா, முதலீடு, எரிசக்தி துறைகளில் இலங்கைக்கு ஆதரவளிப்பதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை அமைச்சர் ஜெய்சங்கர் உறுதிப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.
இது தொடர்பாக இலங்கை அதிபர் அனுரகுமார திஸாநாயக்க தன் எக்ஸ் பக்கத்தில்,“இந்தோ – இலங்கை பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்துதல், முதலீட்டு வாய்ப்புகளை மேம்படுத்துதல், பிராந்திய பாதுகாப்பை மேம்படுத்துதல், சுற்றுலா மற்றும் எரிசக்தி போன்ற முக்கிய துறைகளை மேம்படுத்துதல் ஆகியவை குறித்து எங்கள் உரையாடல்களில் கவனம் செலுத்தினோம். இந்த ஈடுபாடுகள் நமது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை ஆழப்படுத்துவதற்கான உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துகிறது” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.